ஓகனேக்கல் தொடர்பாக கருணாநிதி, பிரதமருடன் பேச்சு: எதியூரப்பா
சென்னை: ஓகனேக்கல் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணப்பட வேண்டும். இதுதொடர்பாக பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதியுடன் பேச்சு நடத்துவேன் என்று கர்நாடக முதல்வர் எதியூரப்பா தெரிவித்தார்.
தினமணி, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் மனோஜ்குமார் சொந்தாலியாவின் மகள் திருமணத்தில் பங்கேற்க சென்னைக்கு நேற்று இரவு வந்த எதியூரப்பா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓகனேக்கல் பிரச்சினை தொடர்பாக அவசரம் காட்டக் கூடாது. இதில் சுமூக தீர்வு காணப்பட வேண்டும்.
இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேசுவேன். முதல்வர் கருணாநிதியுடனும் பேசுவேன்.
ஓகனேக்கல் திட்டத்தை கர்நாடகம் எதிர்க்கிறது. இதை செயல்படுத்தக் கூடாது. மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றார் எதியூரப்பா.
திருமண நிகழ்ச்சியில் எதியூரப்பாவும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலினும் ஒருவரை ஒருவர் சந்தித்தனர். அப்போது இருவரும் சிறிது நேரம் பேசினர்.
மத்திய அரசு தலையிட முடியாது - மொய்லி
இதற்கிடையே, பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் வீரப்ப மொய்லி, ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதில் மத்திய அரசு தலையிட முடியாது. இரு மாநிலங்களும் சுமூகமான முறையில் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications