கப்பலைத் தாக்கி கடற் திருடர்கள் - தாக்கி விரட்டிய இந்திய கடற்படை
டெல்லி: ஏடன் வளைகுடா பகுதியில் இந்திய கப்பலைத் தாக்கிக் கொள்ளையடிக்க முயன்ற கடல் திருடர்களை இந்திய கடற்படை தாக்கி விரட்டியது.
எம்.வி. ஜாக் அர்னவ் என்ற கப்பல் சூயஸ் கால்வாயைக் கடந்து, கிழக்கு நோக்கி போய்க் கொண்டிருந்தது. அப்போது கடல் திருடர்களை கப்பலை சூழந்தனர். கப்பலுக்குள் ஏறி அதைக் கடத்த முயன்றனர்.
அந்தக் கப்பலில் 38 ஆயிரத்து 265 டன் பொருட்கள் இருந்தன. மும்பையைச் சேர்ந்த கிரேட் ஈஸ்டர்ன் ஷிப்பங் கழகத்திற்குச் சொந்தமான கப்பல் இது.
கப்பலை திருடர்கள் சூழ்ந்ததைத் தொடர்ந்து ஏடன் வளைகுடா பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைக் கப்பல் ஐ.என்.எஸ் தபருக்குத் தகவல் போனது.
இதையடுத்து இந்தியக் கடற்படைக் கப்பல் அங்கு விரைந்தது. அதில் இருந்த கடற்படை கமாண்டோ வீரர்கள், மின்னல் வேகத்தில் செயல்பட்டு துப்பாக்கிகளால் சுட்டு திருடர்களை விரட்டியடித்தனர். இதையடுத்து கப்பலைக் கடத்தும் முயற்சியைக் கைவிட்டு விட்டு கடல் திருடர்கள் ஓடி விட்டனர்.
மின்னல் வேகத்தில் இந்திய கடற்படைக் கப்பல் விரைந்ததால் கப்பலைக் கடத்தும் முயற்சி தவிர்க்கப்பட்டது.
பின்னர் மும்பை சரக்குக் கப்பலுக்குப் பாதுகாப்பாக ஐ.என்.எஸ். தபர் உடன் சென்று பாதுகாப்பான பாதையில் அதை விட்டு விட்டுத் திரும்பியது.
இப்பகுதியில் கடற் கொள்ளையர்கள் அட்டகாசம் இருப்பதால் கடந்த அக்டோபர் 23ம் தேதிதான் ஐ.என்.எஸ். தபர் இப்பகுதியில் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பப்பட்டது.
இந்தியக் கப்பல்கள் தாக்கப்பட்டால் அல்லது கடத்த முயற்சி நடந்தால் அதை முறியடிக்க இந்திய கடற்படைக் கப்பல் அங்கு நிலை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications