கிரண் பேடியைத் தடுத்து திருப்பி அனுப்பிய வக்கீல்கள்
கோவை: கோவை வக்கீல்கள் சங்கத்தில் உரை நிகழ்த்த வந்த இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண் பேடியை, வக்கீல்களில் ஒரு பிரிவினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பார் அசோசியேஷனிலிருந்து ஒரு தரப்பினர் பிரிந்து கோவை வக்கீல்கள் சங்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்தப் புதிய சங்கம் சார்பில், இந்தியாவில் வீட்டு வன்முறை என்ற பெயரில் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவை கோர்ட் வளாகத்தில் இந்த கருத்தரங்கு நடைபெறவிருந்தது.
இதில் உரை நிகழ்த்த கிரண் பேடி அழைக்கப்பட்டிருந்தார். இதையொட்டி நேற்று கிரண் பேடி அங்கு வந்தார். அப்போது கோவை பார் அசோசியேஷன் சார்பில் வக்கீல்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கிரண் பேடி வருவதை அறிந்த அவர்கள் கருத்தரங்கு நடைபெறவிருந்த கூடத்தில் திரண்டனர். கோவை வக்கீல்கள் சங்க உறுப்பினர்களிடம், அனைவரும் ஒற்றுமையாக இருப்போம், இந்த கருத்தரங்கை ரத்து செய்யுங்கள் என்று கோரினர். ஆனால் அதை ஏற்க வக்கீல்கள் சங்க உறுப்பினர்கள் மறுத்து விட்டனர்.
இதனால் கோபம் கொண்ட பார் உறுப்பினர்கள், கிரண் பேடியை சூழ்ந்து கொண்டு இங்கு உரை நிகழ்த்த வேண்டாம், திரும்பிச் செல்லுங்கள் என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நிலைமையை உணர்ந்த கிரண் பேடி அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
இருப்பினும் கோர்ட்டுக்கு வெளியே வேறு ஒரு இடத்தில் இந்தக் கருத்தரங்கு நடைபெற்றது. அங்கு கிரண் பேடி உரையாற்றினார்.