ஆளுநரிடமிருந்து பட்டம் பெற மறுத்த நெல்லை மாணவி
நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. அப்போது ஒரு மாணவி கவர்னரிடமிருந்து பட்டம் பெற மறுத்து தனது இருக்கைக்கு திரும்பினார். இதனால் பட்டமளிப்பு விழா அரங்கில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விசாரித்த போது அந்த மாணவி நாகர்கோவில் ஈத்தாமொழியை சேர்ந்த பிருந்தா என்பது தெரிய வந்தது.
இப்பிரச்சனை தொடர்பாக அவர் கூறும்போது நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கல்லூரி பேராசிரியர் செல்வராஜ் மேற்பார்வையில் 99ம் ஆண்டு விலங்கியலில் பிஎச்டி ஆய்வுக்குப் பதிவு செய்தேன். இந்த நிலையில், நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் எனக்கு கடல் வாழ் உயிரினங்கள் குறித்து மட்டும் ஆய்வு செய்திருப்பதாக கூறி அதற்குரிய பட்டம் வழங்க முயற்சி நடந்தது.
இதனை நான் பார்த்து அதனை கவர்னரிடம் வாங்காமல் திரும்பி விட்டேன். எனக்கு விலங்கியலில் பி.எச்.டி பட்டம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து பல்கலை துணைவேந்தர் சபாபதி மோகனிடம் விசாரித்த போது பிஎச்டியில் சம்பந்தப்பட்ட மாணவி செய்த ஆய்வின் அடிப்படையில் அந்த பாடத்திற்கான பட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த பட்டத்தை அவர் பெறவில்லை. இதுகுறித்து முழுவதும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பட்டமளிப்பு விழா முடிவடைந்ததும் மாணவி பிருந்தா கவர்னர் பர்னாலாவிடம் தனக்கு விலங்கியலில் பிஎச்டி ஆய்வு பட்டம் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்படும் என கவர்னர் பர்னாலா உறுதியளித்தார்.
இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது முடிவுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications