போன் ஒட்டு கேட்பில் உபாத்யாவுக்கு தொடர்பு - ஒழுங்கு நடவடிக்கை
சென்னை: முன்னாள் தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதியுடனான தனது பேச்சை பதிவு செய்து அதை வெளியிட உதவியதாக, இந்த வழக்கில் இடமாற்றம் செய்யப்பட்ட ஊழல் தடுப்பு இயக்குநரக இயக்குநர் உபாத்யாயா மீது நீதிபதி சண்முகம் தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் கமிஷன் அரசுக்கு தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டசபையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு திரிபாதிக்கும், உபாத்யாயாவுக்கும் இடையிலான தொலைபேசிப் பேச்சு அடங்கிய டேப் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையிலான ஒரு நபர் கமிஷனை தமிழக அரசு அமைத்தது.
இந்த விசாரணைக் கமிஷன் தனது விசாரணையை முடித்து பரிந்துரை அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த பரிந்துரைகள், அதன் மீதான நடவடிக்கை குறித்து இன்று சட்டசபையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், திரிபாதியுடனான தனது பேச்சை பதிவு செய்து அதை வெளியிட உபாத்யாயா உதவினார் என்று கமிஷன் தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் உபாத்யாயா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் உபாத்யாயாவிடம் சிறப்பு உதவியாளராக இருந்த சங்கர், அனுமதியின்றி உபாத்யாயாவின் கம்ப்யூட்டரிலிருந்து டேப் செய்யப்பட்ட பேச்சை எடுத்து பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளார். இதன் மூலம் அரசின் ரகசியத்தை காக்க அவர் தவறி விட்டார். அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர காவல்துறை அதிகாரிகளான பிரபாகரன், விஜயராகவன் ஆகியோர் மீதும், சில பத்திரிக்கையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் விசாரணைக் கமிஷன் பரிந்துரைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.