சட்டக் கல்லூரி: சேவல் சண்டையா நடந்தது? விஜயகாந்த் ஆவேசம்
சென்னை: சேவல் சண்டை நடக்கிறது என்று நினைத்து சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்டதை போலீஸார் வேடிக்கை பார்த்தார்களா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆவேசமாக கேட்டுள்ளார்.
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
சட்டக் கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களைக் கையில் ஏந்தி, அவர்கள் தாக்கிக் கொண்டது எந்த அளவுக்கு கிரிமினல் நடவடிக்கைகள் நாட்டில் அரங்கேறி வருகின்றன என்பதை காட்டுவதாக உள்ளது.
சம்பவ தினத்தன்று பயங்கர ஆயுதங்களுடன் ஒரு பகுதி மாணவர்கள் முன் கூட்டியே சட்டக் கல்லூரியில் கூடியுள்ளனர். தேர்வு எழுதிய பிறகு வெளியே வரும் மாணவர்களைத் தாக்க எதிர்பார்த்து இருந்தனர். இதைக் கல்லூரி முதல்வர் காவல்துறைக்குப் புகார் கொடுத்திருக்க வேண்டாமா. வெளியில் நின்ற காவல்துறையினர் இதை அறிந்தும் பேசாமல் இருந்தது ஏன்.
சட்டக் கல்லூரி மாணவர்கள் மிருகத்தனமாக தாக்கிக் கொண்ட போது காவல்துறை கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது வெட்க்கேடானது.நடப்பது சேவல் சண்டை என்று பார்த்தார்களா?. உயிர் போனால் திரும்ப வருமா?. பொதுமக்கள் பொங்கி எழுந்து அவர்கள் சென்று அடித்த மாணவர்களை விரட்டி அடிபட்ட மாணவர்களை காப்பாற்றியிருக்கிறார்கள்.
தங்கள் முன்னாலேயே கொலைக்குற்றம் நடக்கிறபோது அதைத் தடுக்க வேண்டிய காவல்துறை மனிதாபிமானம் சிறிதும் இல்லாமல் நடந்து கொள்வானேன்?.
காவல்துறை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தால், ஆளுங்கட்சியினர் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை தண்ணி இல்லா காட்டுக்கு மாற்றி விடுகின்றனர். ஆகவே காவல்துறையினர் யார் எக்கேடு கெட்டால் என்ன நிலைக்கு ஆளாகி விட்டனர்.
உண்மையில் இன்று மக்களின் உயிருக்கும், உடமைக்கும் உத்தரவாதம் இல்லை.சென்னை அருகே எருக்கஞ்சேரியில், பஸ் நிறுத்தப்படுகிறது, வன்முறைக் கும்பல் பஸ்சில் ஏறி பெட்ரோல் ஊற்றி தீவைத்திக் கொளுத்தி விட்டு தப்பி ஓடுகிறது.
ஏ, தாழ்ந்த தமிழகமே!, நீ தலைநிமிர்வது எப்போது? என்று கேட்டுள்ளார் விஜயகாந்த்.