பொருளாதார நெருக்கடி தொடர்ந்தாலும் ஆளெடுப்பு தொடரும்: இன்போசிஸ்
டெல்லி: உலகப் பொருளாதார சந்தையில் பெரும் சரிவு காணப்பட்டாலும், தொடர்ந்து ஆளெடுப்புப் பணிகளை மேற்கொள்வோம் என இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், இணைத் தலைவருமான நந்தன் நிலகேனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஐடி துறையில் சரிவு காணப்படுகிறது. இருப்பினும் இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வந்து விட முடியும். எனவே ஆளெடுப்பு தொடர்பான எங்களது திட்டமிட்ட பணிகளில் எந்தவித சுணக்கத்தையும் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. தொடர்ந்து ஆளெடுப்பு நடைபெறும்.
ஐ.டி. துறையில், கடந்த நான்கு ஆண்டுகளில் இருந்ததைப் போன்ற வளர்ச்சியை இந்த நிதியாண்டில் நாம் காண முடியாது.
அவுட்சோர்சிங் தொடர்பாக பாரக் ஓபாமா கூறியுள்ளது குறித்து நாம் வாட்ச் அன்ட் வெயிட் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஓபாமாவின் கொள்கைகள் என்ன என்பதை அவர் அதிபரான பின்னர்தான் அறிய முடியும் என்றார் நிலகேனி.
பொருளாதார நெருக்கடி ஒருபக்கம் இருந்தாலும் ஆளெடுப்பு தொடரும் என இன்போசிஸ் அறிவித்துள்ள நிலையில் இன்னொரு முக்கிய ஐடி நிறுவனமான டிசிஎஸ், இந்த நிதியாண்டில் 30,000 முதல் 35 ஆயிரம் பேர் வரை வேலைக்கு எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதில் 18 ஆயிரம் பேர் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டதாக அது தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications