சட்ட மாணவர்களை ஜெ., வைகோ தூண்டி விட்டிருக்கலாம்: கருணாநிதி சந்தேகம்

கோவையில் நடைபெறும் திமுக சார்பிலான அண்ணா நூற்றாண்டு விழா மற்றும் மேற்கு மண்டல மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று காலை முதல்வர் கருணாநிதி கோவை வந்தார்.
பின்னர் ஹோட்டலில் செய்தியாளர்களை முதல்வர் சந்தித்தார். அப்போது அவரிடம் சென்னை சட்டக் கல்லூரி விவகாரம் தொடர்பாக நீங்கள் பதவி விலக வேண்டும் என ஜெயலலிதாவும், வைகோவும் கோரி வருகின்றனரே என்று கேட்ட கேள்விக்கு, நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் இரு சாராரையும் தூண்டிவிட்டு சண்டைப் போட வைத்திருப்பார்களோ என்று தோன்றுகிறது என்றார்.
பின்னர் இலங்கைப் பிரச்சினை குறித்து முதல்வர் பேசுகையில், இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து பிரதமரையும், சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசியுள்ளேன். மேலும், திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் மூலம் இலங்கையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது தினமும் கேட்டு அறிந்து வருகிறேன்.
மேலும், இப்பிரச்சனை தொடர்பாக திமுக செயற்குழு கூட்டத்திலும், அனைத்துக் கட்சி கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அதிபர் ராஜபக்சேயின் நடவடிக்கை நம்பத் தகுந்ததாக இல்லை. காரணம், தீவிரவாதம் மற்றும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதாக அவர் சொல்கிறார். ஆனால் புலிகளை அடக்குவோம் என்ற பெயரில் இலங்கைத் தமிழர்களுக்கு சொல்லொணாத் துன்பத்தை அவர் அளித்து வருவது திருப்திகரமான செயல் அல்ல.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்
ஈழப் பிரச்சனை தொடர்பாக நாளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளாது. இந்தப் பிரச்சனையில் ஆர்வம் காரணமாக ஒவ்வொருவரும் தனித்தனியே முயற்சி எடுக்கிறார்கள். இதில் தவறு ஏதும் இல்லை.
ழப் பிரச்சனையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்திய அரசு கொண்டு செல்ல வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியிருப்பதாக இன்று காலைதான் அறிந்தேன். நான் சென்னை சென்ற பிறகு அதன் முழு விவரமும், தெரிந்து கொண்டு அதன்பிறகு இதுபற்றி எனது கருத்தை தெரிவிக்கிறேன்.
கல்வி நிறுவனங்களில் ஜாதி ரீதியிலான மோதல்கள் ஏற்படுவது ஆரோக்கியமற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இவற்றுக்கு எதிராக தொடர்ந்து நானும், திமுக இயக்கமும் குரல் கொடுத்து வருகிறது.
மாநில சுயாட்சி என்ற கருத்தை இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இடம்பெற செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக திமுக குரல் கொடுத்து வருகிறது. இதில் தனிப்பட்ட ஒரு கட்சி மட்டும் முடிவெடுக்க முடியாது.
ஜெ.வுக்கு அதிகப்படியான பாதுகாப்பு
ஜெயலலிதாவுக்கு அதிகப்படியான பாதுகாப்பை தமிழக அரசு அளித்து வருகிறது. இசட் பிரிவு பாதுகாப்பின்கீழ் 54 போலீசார் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபட முடியும்.
ஆனால் கூடுதலாக, 174 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும அவருக்கு குண்டு தொலைக்காத காரும், வாயில் காவல் பாதுகாப்பும் தரப்பட்டுள்ளது.
ஆனால் 2001-06-ம் ஆண்டுகளில் என்னுடைய பாதுகாப்புக்கு 43 போலீசார் மட்டுமே நியமிக்கப்பட்டனர்.
பசும்பொன் கிராமத்தில் நடந்த சம்பவத்தின்போது ஜெயலலிதா மீது தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. அவரது ஆதரவாளர்கள்தான் கற்களை வீசி கலாட்டா செய்துள்ளனர் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications