தேமுதிக தலைமையில் பொற்கால ஆட்சி மலரும்: பிரேமலதா
சென்னை: தமிழகத்தில் தேமுதிக தலைமையில் பொற்கால ஆட்சி உருவாகும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
மின்வெட்டு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து தேமுதிக மகளிரணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடந்தது.
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த பிரேமலதா பேசியதாவது:
சம்பிரதாயத்திற்காகவோ, நிகழ்வுக்காகவோ இந்த ஆர்ப்பாட்டம் நடக்கவில்லை. விலைவாசி உயர்வு, மின்வெட்டு ஆகிய இரண்டு பிரச்சனைகளால் தமிழகம் இருண்ட காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை கண்டிக்கும் வகையிலும், வரும் காலத்தில் தமிழகம் எப்படி இருக்க வேண்டும், அதற்கு எப்படி தயார்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
ஒரே நாளில் இந்த பிரச்சனைகள் வந்துவிடவில்லை. விவசாய உற்பத்தி தமிழகத்தில் 2 சதவீதம் மட்டுமே இருக்கிறது. இதனால் உணவு பற்றாக்குறையும், அதன் காரணமாக விலைவாசி உயர்வும் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை மாறி, மாறி ஆட்சி செய்த திமுக, அதிமுக கட்சிகள் ஐந்தாண்டு திட்டங்களை வகுத்தார்களே தவிர அதை செயல்படுத்தவில்லை. சேமிக்க முடியாமல் வீணாகும் பொருட்களை பாதுகாத்தாலே விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
தமிழகத்தில் தற்போது 7200 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் 2000 மெகாவாட் தேவைப்படுகிறது. இதில் 1000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசு தருவதாக கூறியுள்ளது. ஆனால் எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை.
சூரிய சக்தி சோலார் மூலம் மின்சாரம் தயாரிப்பதை அதிகரிக்க வேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 68,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரு திட்டத்திலேயே இவ்வளவு என்றால், ஒவ்வொரு திட்டத்திலும் எவ்வளவு இருக்குமோ?
தேமுதிகவிற்கு மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பொற்கால ஆட்சி அமைய வேண்டுமென்றால் ஒரு புதிய சக்தி, புதிய ஆட்சி அமைய வேண்டும். விஜயகாந்த் தலைமையில் தமிழகத்தில் பொற்கால ஆட்சி அமையும்.
அமெரிக்காவில் ஒபாமா தலைமையில் ஒரு மாற்றம் வந்துள்ளதை போல, தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். தேமுதிக தலைமையில் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications