குளிர்பான விலையை உயர்த்த பெப்ஸி திட்டம்
சர்வதேச பிரச்சனையாக உருவெடுத்துள்ள பொருளாதார வீழ்ச்சி வணிகத்துறையை பெரிதும் பாதித்துள்ளது.
குளிர்பான வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கும் பெப்ஸி நிறுவனமும் இதில் தப்பவில்லை. கடந்த காலாண்டைவிட, தற்போது பெரும் நஷ்டத்தை இந்த நிறுவனம் சந்தித்து வருகிறது.
இந்த நஷ்டத்தை ஈடுகட்ட, பணியாளர் குறைப்பு மற்றும் விலையேற்றம் ஆகிய இரு ஆயுதங்களைக் கையிலெடுத்துள்ளது.
ஏற்கனவே கொக கோலா நிறுவனம் தனது குளிர்பானம் மற்றும் பாட்டில் குடிநீ்ர் தயாரிப்புகள் மீதான விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இந்தியாவுக்கான பெப்ஸி தலைவர் சஞ்சீவ் சாதா கூறுகையில், இந்தியாவில் பெப்ஸி தயாரிப்புகள் சீரான விற்பனையில் உள்ளன. குளிர்பானம் மற்றும் உணவு தயாரிப்புகள் ஒரு கூரையின் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மறுசீரமைப்பு ஜனவரி முதல் தேதியில் இருந்து அமல்படுத்தப்படும்.
குளிர்பானம் மற்றும் ஸ்நாக்ஸ் தயாரிப்புகளின் விலையை அதிகரிக்க பரிசீலித்து வருகிறோம். அதே சமயம், குறைந்த அளவில் விலையை உயர்த்தி, தயாரிப்புகளின் தரத்தை மேலும் உயர்த்துவோம்.
பொதுவாக வாடிக்கையாளர்கள் எப்போதுமே ஆரோக்கியமான தயாரிப்புகளை கேட்பதில்லை. சுவையாகவும், வேடிக்கையாகவும் உள்ள தயாரிப்புகளையும் வாடிக்கையளாகள் விரும்புகின்றனர். ஆனால் ஆரோக்கியமான தயாரிப்புகள் வழங்கப்பட வேண்டும் அடுத்த 3 ஆண்டுகளில் புதிய தயாரிப்புகள், மார்க்கெட்டிங் கட்டமைப்பு, ஆய்வு மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்காக கூடுதலாக 500 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளோம். நிறுவனத்தின் சர்வதேச தலைவர் இந்திரா நூயி கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா வந்துபோது இதை அறிவித்தார் என்றார்.