சபரிமலையில் குடிநீர்-கழிப்பறை பிரச்சினை: பக்தர்கள் அவதி
சபரிமலை: சபரிமலையில் சீசன் தொடங்கியுள்ள நிலையில் அங்கு அடிப்படை வசதிகள் சரிவர செய்யப்படாமல் உள்ளதால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாக நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வருவது வழக்கம். தற்போது அய்யப்ப சீசன் தொடங்கியுள்ளது. இதையடுத்து பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர்.
ஆனால் பக்தர்களுக்குத் தேவையான பல அடிப்படை வசதிகள் இன்னும் சரிவர செய்யப்படவில்லை. குறிப்பாக குடிநீருக்கு போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.
தற்போது சபரிமலைக்கு வந்து கொண்டிருக்கும் பக்தர்களுக்கு மலைப் பாதையிலும், சன்னிதானத்திலும் குடிநீர் கிடைப்பதில்லை. இதையடுத்து அதிக விலை கொடுத்து பாக்கெட் குடிநீரை வாங்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இப்படி வாங்கப்படும் பாக்கெட் குடிநீரை குடித்து விட்டு, பிளாஸ்டிக் பாக்கெட்களை ஆங்காங்கே போட்டுச் செல்வதால் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
குடிநீருக்கு திருவாங்கூர் சமஸ்தானம் போதிய ஏற்பாடுகளை செய்யாததால், பாட்டில் குடிநீருக்கும், பாக்கெட் குடிநீருக்கும் பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடைக்காரர்களும் அதிக விலைக்கு இவற்றை விற்று வருகின்றனர்.
இந்த பாட்டில் குடிநீர் குறைந்தது ரூ. 50 முதல் ரூ. 200 வரை விற்கப்படுகிறதாம். இதனால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வழக்கமாக ஆண்டுதோறும் சீசனின்போது மலைப் பாதையி்ல், நூற்றுக்கணக்கான குடிநீர்க் குழாய்களை கோவில் தேவஸ்தானம் அமைப்பது வழக்கம். ஆனால் இப்படி போடப்பட்ட குழாய்கள் திருட்டு போய் விட்டனவாம். இதனால் புதிய குழாய்களை அமைக்காமல் தேவஸ்தானம் விட்டு விட்டது.
தற்போது அய்யப்ப சேவா சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே குடிநீர் வழங்கி வருகின்றனர். ஆனால் வருகின்ற கூட்டத்துக்கு இது போதுமானதாக இல்லை.
மேலும் சீசன் தொடங்கிய சில நாட்களிலேயே ஆங்காங்கு அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகள் நிரம்பி மல நீர் வெளியே ஓடத் தொடங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம் மூக்கைத் துளைக்கிறது.
இப்படி குடிநீர், கழிப்பறை என பல அடிப்படை வசதிகள் அரைகுறையாக இருப்பதால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
மலைப் பகுதியில் பக்தர்கள் விட்டுச் செல்லும் பிளாஸ்டிக் வேறு குவியல் குவியலாக குவிந்து வருவதால் வேறு வழியின்றி அவற்றை வனத்துறையினல் தீயிட்டுக் கொளுத்தி வருகின்றனர்.
பிளாஸ்டிக்குகளை ஏலத்தில் விடலாம் என டெண்டர் விட்டால் அதை எடுக்க யாரும் முன்வரவில்லையாம்.
ஹெலிகாப்டர் சேவை:
இதற்கிடையே, சபரிமலை பக்தர்களின் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதுதவிர பத்தரை லட்சம் டின் அரவணைப் பிரசாதம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மலைப் பாதையில் மூச்சு வாங்குவோருக்கு வசதியாக ஆக்சிஜன் பார்லர்களும் அமைக்கப்படவுள்ளன. இந்த ஆண்டின் முக்கிய அம்சங்கள் இவை.
நேற்று கேரள முதல்வர் அச்சுதானந்தன், பம்பை ஆற்றில், பம்பை ஆற்றுப் படுகை ஆணையத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது இந்தத் தகவல்களை அவர் தெரிவித்தார்.
அச்சுதானந்தன் கூறுகையில், கடந்த ஆண்டு அரவணைப் பிரசாதம் வழங்குவது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தன. பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்பட்டது. எனவே இந்த முறை பத்தரை லட்சம் டின் அரவணைப் பிரசாதத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பற்றாக்குறை ஏற்படாது என்றார்.