For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

''ராஜிவ் கொலையை வைத்து தமிழ் உணர்வுகளை அழிப்பதா?''

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ராஜிவ் காந்தி கொலையை வைத்து தமிழ் உணர்வுகளை அழித்து விட முடியாது என தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாணவர் அமைப்பான முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் ஈழத் தமிழர்களை காப்பாற்றக் கோரியும் இலங்கையில் போரை நிறுத்தக் கோரியும் பேரணி நடைபெற்றது. பேரணியை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தொடங்கி வைத்தார்.

மன்றோ சிலை அருகே தொடங்கிய பேரணி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் முடிவடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.

எங்களை அழித்துக் கொள்வோம்-வீரமணி:

பேரணியை தொடங்கி வைத்து வீரமணி பேசுகையில், நமக்கு ஒரே இலக்குதான் இலங்கையில் யுத்த நிறுத்தம் செய்ய வேண்டும். தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் எங்களையும் அழித்துக் கொள்ள தயங்க மாட்டோம்.

ராஜிவ் காந்தி கொலையை வைத்து தமிழ் உணர்வுகளை அழித்து விட முடியாது. இலங்கை ராணுவத்தால் இறுதி வெற்றி பெற முடியாது என்றார்.

சுண்டைக்காய் நாட்டின் தைரியம்-ராமதாஸ்:

பேரணியின் முடிவில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உரையாற்றினார். அவர் கூறியதாவது:

அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி போரை நிறுத்துவோம் என்று தீர்மானம் கொண்டு வந்தோம். தொடர்ந்து தமிழக முதல்வர் எடுத்த முயற்சிகள், எடுக்கின்ற முயற்சிகளுக்கு பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் ஆதரவு கொடுத்து கொண்டிருக்கிறோம்.

யோசனைகளையும் சொல்லி வருகிறோம். பிரதமர் போரை நிறுத்த வேண்டும் என்று சொன்ன நிலையிலே, வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அழுத்தம் திருத்தமாக போரை நிறுத்த வேண்டும் என்று சொன்ன நிலையிலே, ராஜபக்சே கேட்கவில்லை. அவர் இந்தியாவை மதிக்கவில்லை என்று தான் அர்த்தம்.

ஒரு சுண்டைக்காய் நாடு. இந்தியா வளர்ந்து வருகிற வல்லரசு என்று மற்ற நாடுகள் நினைத்து கொண்டிருக்கிறபோது இந்த சுண்டைக்காய் நாடு எந்த தைரியத்திலே அப்படி சொல்கிறது.

தமிழர்கள் எரிமலையாக கொதித்து போய் இருக்கிறார்கள். போரை நிறுத்த முடியாது என்று சொல்லிவிட்டார் ராஜபக்சே. அடுத்து என்ன செய்ய போகிறோம்.

ஆறே கால் கோடி தமிழர்களுக்கு தலைமை தாங்குகின்ற முதல்வர் கலைஞரின் வேண்டுகோளையும், சிங்களவன் நிராகரித்து விட்டான்.

ஏற்க மறுத்துவிட்டான் என்கிற போது மாற்று வழி என்ன என்பதை நாம் யோசிக்க வேண்டும். இதில் நானும், திருமாவளவன் மட்டும் யோசித்தால் போதாது. ஒன்று கூடி, தமிழக முதல்வர் தலைமையிலே ஒன்று கூடி அடுத்து என்ன என்பதை நாம் அவர் தலைமையிலே யோசிக்க வேண்டும்.

அவரை முன்னிறுத்தி யோசிக்க வேண்டும். அவர் பின்னால் நின்று போராடுவதற்கு நம்மை தயார்படுத்த வேண்டும்.

இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டோம் என்ற நிலை உருவாக வேண்டும். தனித்து கூட்டம் போடுங்கள். ஆனால் தனித்து முடிவு எடுக்காதீர்கள். மாறுபாடாக கருத்து சொல்கிறேன் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம்.

அந்த வகையில் அடுத்து இந்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற வேண்டுகோளை நான் வழிமொழிகிறேன் என்றார் ராமதாஸ்.

பேரணியில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், நடிகர் மன்சூர் அலிகான், இயக்குனர் வி.சி.குகநாதன், ஓவியர் வீரசந்தானம் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X