மகளிர் காப்பகத்தில் லெஸ்பியன் டார்ச்சர்- விசாரண
திருச்சி: திருச்சியில் உள்ள மகளிர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண்களை அங்குள்ள சில பெண்கள் தகாத செக்ஸ் உறவுக்கு அழைத்து கொடுமைப்படுத்துவதாக பரபரப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம், திருவையாறு ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், எனது மகள் கிருத்திகா (17) பிளஸ் டூ முடித்துள்ளார். மாமா வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் பல நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து விசாரித்த போது கிருத்திகாவை திருவையாறு பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற நபர் கடத்தி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே எனது மகளை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ரகுபதி, சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கிருத்திகாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்திரவிட்டனர்.
அதன்பேரில் போலீசார் கிருத்திகாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மகளிர் காப்பகத்தில் தங்க வைத்தனர்.
நேற்று நீதிமன்ற விசாரனையின் போது கிருத்திகா தனது பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கிருத்திகா திருச்சி மகளிர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட போது அங்கு முறையான உணவு வழங்கப்படுவதில்லை என்றும், அங்கு சில பெண்கள் தகாத உறவில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளார்.
எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி அந்த அறிக்கையை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மகளிர் காப்பகத்தில் செக்ஸ் டார்ச்சர் நடப்பதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.