விபத்துக்குள்ளான ரஷ்ய நீ்ர்மூழ்கியில் இந்தியர்கள்?
அகுலா-2 ரக நீர் மூழ்கிக் கப்பலான அது அணு சக்தியால் இய்கக் கூடியது. K-152 நெர்பா என்ற பெயர் சூட்டப்பட்ட அந்தக் கப்பல் இந்திய கடற்படைக்கு 10 ஆண்டு குத்தகைக்கு தரப்பட இருந்தது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கவுள்ள விமானம் தாங்கிக் கப்பலான கோர்க்ஸ்கோவுடன் சேர்த்து இந்தக் கப்பலையும் இந்தியா வாங்க இருந்தது. (கோர்கோவுக்கு மேலும் 2 பில்லியன் டாலர் பணம் கேட்டு ரஷ்யா புதிய சிக்கலை ஏற்படுத்தி வருவது தனிக் கதை)
இந்திய கடற்படையைச் சேர்ந்த பல வீரர்கள் அணி, அணியாக இந்தக் கப்பலில் பயிற்சி பெற்று வந்தனர்.
ரஷ்யாவின் அமுர் பகுதியில் உள்ள கோம்சோமோல்ஸ்க் நீர் மூழ்கித் தளத்தில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
80 பேர் பயணிக்கக் கூடிய இந்தக் கப்பலில் கடந்த சனிக்கிழமை இரவில் வாயுக் கசிவு ஏற்பட்டது. திடீரென அதில் பிரீயான் வாயு கசிந்ததில் 20 பேர் பலியாயினர். முதலில் இவர்கள் அனைவரும் ரஷ்யர்கள் என்று கருதப்பட்டது.
ஆனால், விபத்து நடந்தபோது அதில் 208 பேர் இருந்ததும், அதில் இந்தியர்களும் இருந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
பெயர் குறிப்பிட விரும்பாத ரஷ்ய பாதுகாப்பு நிபுணர் ஒருவர் இதைத் தெரிவித்துள்ளார்.
இந்த நீர் மூழ்கிக் கப்பலை கட்டும் பணியில் ஆரம்பித்து இப்போது கடலில் பயிற்சிகள் நடக்கும் நிலை வரை ஒவ்வொரு கால கட்டத்திலும் இதில் இந்திய கடற்படையினர் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
ஆனால், இதை இந்திய கடற்படை உறுதிப்படுத்தவில்லை. ரஷ்யாவில் இந்திய கடற்படையினர் இருப்பதும், நீர் மூழ்கித் திட்டங்களில் இணைந்து பணி புரிவதும் உண்மை. இந்த விஷயத்தை (விபத்து) நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம் என்று மட்டும் இந்தியக் கடற்படை கருத்துத் தெரிவித்துள்ளது.