உணவுப் போட்டி-சாப்ட்வேர் என்ஜீனியர் மூச்சு திணறி பலி
கர்கான்: கர்கானில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் மதிய உணவு இடைவேளையின்போது, ஊழியர்களுக்கு இடையே நடத்தப்பட்ட கேக் சாப்பிடும் போட்டியின்போது ஏராளமான கேக்குகளை சாப்பிட்டு மூச்சுத் திணறி, தொண்டை அடைத்து ஒரு என்ஜீனியர் பலியானார்.
கர்கானில் உள்ள நோக்கியா சீமன்ஸ் நெட்ஒர்க்கிங் நிறுவனத்தில் சொல்யூஷன்ஸ் என்ஜீனியராக பணியாற்றஇ வந்தவர் 22 வயதாகும் செளரவ் சபர்வால். கிழக்கு டெல்லியின், பத்பர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர்.
இவர், தனது அலுவலகத்தின் காபி கிளப்பில், மதிய உணவு இடைவேளையின்போது நடத்தப்பட்ட கேக் சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டார். அப்போது ஏராளமான கேக்குகள் போட்டிக்கு வைக்கப்பட்டன. அவற்றை போட்டியில் கலந்து கொண்ட ஊழியர்கள் வேகம் வேகமாக சாப்பிட்டனர்.
சபர்வால் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக வேகம் வேகமாக கேக்குகளை அள்ளி வாயில் திணித்தார். அப்போது அவருக்கு தொண்டை அடைத்து மூச்சுத் திணறியது.
இதையடுத்து பாத்ரூமுக்கு அவர் சென்றார். அங்கு மயங்கி விழுந்தார். இதையடுத்து போட்டி நிறுத்தப்பட்டது. சக ஊழியர்கள், சபர்வாலை, மாக்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சபர்வால் மறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் தெரிவிக்கையில், வேடிக்கைகாக இந்தப் போட்டியை நடத்தியுள்ளனர். இதில் கலந்து கொண்ட செளரவ் சபர்வால் ஏராளமான கேக்குகளை சாப்பிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அவருக்கு ஒரு மாதிரியாக வந்துள்ளது.
இதையடுத்து முகம் கழுவுவதற்காக வாஷ் பேசினுக்கு அவர் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால், அவருடைய சக ஊழியர்கள் சென்று பார்த்துள்ளனர்.
வாஷ் பேசின் அருகே சபர்வால் மயக்கமடைந்த நிலையில் இருப்பதைப் பார்த்தும் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர் என்றார் அவர்.
இந்த சம்பவம் குறித்து நோக்கியா சீமன்ஸ் நிறுவனம் கருத்து எதுவும் வெளியிடவில்லை.
செளரவின் மூச்சுக் குழாய்க்குள் அவர் சாப்பிட்ட கேக்கின் துகள்கள் சென்று அடைத்துக் கொண்டதால்தான் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை மருத்து ஆலோசகர் டாக்டர் சுசும் சர்மா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நாங்கள் அவருடைய மூச்சுக் குழாயில் சிக்கியவற்றை எடுக்க முயன்றபோது, ஏராளமான கேக் துகள்கள் வந்தன. இப்படிப்பட்ட நிலையில் நுரையீரலுக்கு காற்று சற்றும் போயிருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அவர் எத்தனை கேக்குகளை சாப்பிட்டார் என்று தெரியவில்லை என்றார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம்தான் இந்த நிறுவனத்தில் சபர்வால் வேலைக்குச் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications