பொருளாதார நெருக்கடி: தொழிலதிபர்களுடன் அத்வானி ஆலோசனை!!
டெல்லி: சர்வதே பொருளாதார நெருக்கடி இந்திய தொழில் துறையில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து நாட்டின் முன்னணி தொழிலதிபர்களுடன் பேச்சு நடத்தினார் அத்வானி.
அவருடன் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பிரதமர், அரசின் ஆலோசகர் போன்ற பெரும் பதவிகளில் உள்ள மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோர் இந்த விஷயத்தில் அமைதி காக்க, பாஜகவின் பிரதமர் வேட்பாளர் எனப்படும் அத்வானியின் இந்த திடீர் சந்திப்பு பல மட்டங்களிலும் ஆச்சர்ய அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதைவிட ஆச்சர்யம், இந்த சந்திப்பில் அனில், முகேஷ் அம்பானிகள், சுனில் மித்தல், ராகுல் பஜாஜ், சுபாஷ் சந்த்ரா, சஷி ரூயா போன்ற பெரும் தொழிலதிபர்கள் வெளிப்படையாகப் பங்கேற்றதுதான். சமீபத்தில் விலைவாசியைக் குறைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விடுத்த கோரிக்கையை பகிரங்கமாக எதிர்த்ததுடன், விலைக் குறைப்பு சாத்தியமில்லை, முடிந்தால் மக்களுக்கு அதிக கடன் வழங்க ஏற்பாடு செய்யுங்கள் என கிண்டலடித்திருந்தார் ராகுல் பஜாஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தொழிலதிபர்கள் அனைவரும், நாட்டின் தொழில் முன்னேற்றம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு, இதைத் தடுத்து நிறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்களாம்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய ஜஸ்வந்த் சிங், நாட்டில் பணப் புழக்கமே இல்லை. வங்கிகள்கூட ஒன்றுக்கொன்று கொடுக்கல் வாங்கலில் ஈடுபட அச்சப்படும் நிலை. உற்பத்தித் துறையில் 50 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு அதி்க அளவு இப்போது கடன் தரவேண்டும், இல்லாவிட்டால் நாடு எந்த நிலைக்குப் போகுமோ... நினைக்கவே அச்சமாக உள்ளது. தொழிலதிபர்களின் கவலைகளை அத்வானி கேட்டுக் கொண்டார். அடுத்து நடுத்தர, சிறு தொழிலதிபர்களையும் சந்திக்கப் போகிறார், என்றார்.












Click it and Unblock the Notifications