கிரிக்கெட் ஸ்டேடியத்தின் 150 அடி உயர மின் கம்பத்தில் சிக்கிய இருவர் மீட்பு

சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ளது. இந்த ஸ்டேடியத்தில் டிசம்பர் 5 முதல் 10-ந் தேதி வரை ஐ.பி.எல். சாம்பியன் லீக் 20/20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
அனைத்து போட்டிகளும் இரவு போட்டிகள் என்பதால், கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள 4 பிரமாண்ட மின்விளக்குகளிலும் நேற்று பராமரிப்பு பணிகள் நடந்தன. இந்த பணியை தேனாம்பேட்டையில் உள்ள பாரன் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் ஏற்றுள்ளது.
நேற்று மதியம் 1.30 மணியளவில், ஸ்டேடியத்தில் மேற்கு பகுதியில் உள்ள மின்விளக்கில் பராமரிப்பு பணி செய்வதற்காக நடராஜன், ராஜ்மோகன் என்ற ஊழியர்கள், லிப்ட் மூலம் மேலே ஏறினார்கள்.
இந்த மின்விளக்கு 150 அடி உயர பிரமாண்ட தூணில் அமைந்துள்ளது. பின்னர், மாலை 4.30 மணியளவில் பணியை முடித்துக்கொண்டு கீழே இறங்க முயன்றபோது, லிப்ட் வேலை செய்யவில்லை. இதனால், அவர்கள் இருவரும் மேலே தவித்தனர்.
இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஸ்கை லிப்ட் (நகரும் ராட்சத ஏணி) மூலம் மாட்டிக் கொண்ட இருவரையும் மீட்க முயன்றனர். ஆனால், ஸ்கை லிப்ட் 125 அடி உயரம்தான் இருந்ததால், அவர்களை மீட்பத்தில் சிக்கல் ஏற்பட்டது.
உடனே, சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து 30 அடி உயர ஏணியை கொண்டுவந்து, ராட்சத ஏணியுடன் இணைத்து மேலே தூக்கினார்கள். இறுதியில் சுமார் மூன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு, ஊழியர்கள் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் கூட்டம் கூடிவிட்டது, பரபரப்பாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications