Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓ! அது அந்த (ஜெ) ஆட்சிக் காலமோ?-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டக் கல்லூரி வன்முறை தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளதற்கு முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் நந்தி கிராம், சிங்கூர் பிரச்சனைகளில் நடந்த கற்பழிப்பு, கொலை, துப்பாக்கிச் சூடு பலிகள் தொடர்பாக பதவியிலே உள்ள உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை கமிஷன் அமைக்க தமிழக மார்க்சிஸ்ட் கட்யூனிஸ்ட் பரிந்துரை செய்யுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: பிரதமர் இந்திரா காந்தி அம்மையாருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் பற்றி கண்ணீர் கட்டுரை வெளியிட்டுள்ள விகடன் இதழ்', அடடா ஜெயலலிதாவை எந்த அளவுக்கு தூக்கிப் பிடித்திருக்கிறது பார்த்தீரா?

பதில்: அன்னை இந்திரா காந்திக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம், எம்.ஜி.ஆர். சென்னை மருத்துவமனையில் நோயுற்றுப் படுத்திருந்தபோது. இதே ஜெயலலிதா தான் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை வந்த பிறகு, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஒரு கடிதம் எழுதினாரே,

அந்த கடிதத்தில் தானே, எம்.ஜி.ஆர், தனது செல்வாக்கு வளருவது கண்டு பொறாமைப்படுகிறார் என்றும், இனி அவர் முதல்வராக இயங்க முடியாதென்றும், தன் கைப்படவே ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதி, அக் கடிதம் மக்கள் குரல்' பத்திரிகையில் கூட வெளியிடப்பட்டிருந்ததே, விகடன் அந்த கடிதம் பற்றி அறியவில்லை போலும்.

கேள்வி: சட்டக் கல்லூரி கலவரம், வன்முறை பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை நடத்தினால் போதாது என்றும், பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி விசாரிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்கள் கருத்தறிவித்திருக்கிறார்களே?

பதில்: மேற்கு வங்காள அரசு, நந்தி கிராம் நிகழ்ச்சிகளுக்கும், போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு பலியானவர்கள் 14 பேர் என்றும் அந்த மாநில சட்டமன்றத்திலேயே அரசின் சார்பில் ஒப்புக் கொள்ளப்பட்டதே, அதற்கும் சுப்ரீம் கோர்ட்டில் பதவியிலிருக்கும் நீதிபதி மூலம் விசாரணை நடத்திட முன் வருமா?

அதைப் போலவே சிங்கூர் சிறப்பு பொருளாதார மண்டலப் பிரச்சினையில் 18.12.06 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தெபுமாலிக் மற்றும் கரிதத்தா ஆகியோர் 'விவசாய நிலத்தைப் பாதுகாப்போம்' இயக்கத்தைச் சேர்ந்த தபசி மாலிக் என்ற பெண்ணை கற்பழித்து கொலை செய்த சம்பவம் குறித்து பதவியிலே உள்ள உயர்நீதி மன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை கமிஷன் அமைத்திட தமிழக மார்க்சிஸ்ட் கட்யூனிஸ்ட் பரிந்துரை செய்ய முன் வருவார்களா?.

அப்படி நடைபெற்றால் அதைப் பாராட்டிவிட்டு அதன் பிறகு தமிழகத்திலே அவர்களின் யோசனையைப் பரிசீலிக்கலாம்.

கேள்வி: அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரை 4 நாட்களில் சுருக்கி விட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் என்.வரதராஜன் அறிக்கை விடுத்துள்ளாரே?

பதில்: தமிழக சட்டமன்றம் 6 மாதங்களுக்குள் ஒரு முறை கூட்டப்பட வேண்டும் என்பது விதி. அதற்கேற்ப பட்ஜெட் கூட்டத் தொடர் மே திங்களில் பொதுவாக முடிந்தால், அதற்கு அடுத்து 6 மாதங்களுக்குள் ஒரு முறை சட்டமன்றம் கூட்டப்பட வேண்டும். அந்த முறையில் தான் நவம்பர் திங்கள் சட்டமன்றம் கூட்டப்பட்டது.

சட்டமன்றம் கூட்டப்பட்டபோது, அப்போது அதிலே நிறைவேற்றப்பட வேண்டியவை என்ற வகையில் ஒரு சில அவசர சட்டங்களும், ஒரு சில மசோதாக்களும் தான் இருந்தன. எனவே 4 நாட்கள் அவையை நடத்தினால் போதும் என்ற நிலையே அதிகமாகத் தோன்றியது.

அது மாத்திரமல்ல, இதுவரை எந்த ஆண்டிலும், அக்டோபர், நவம்பர் திங்களில் சட்டமன்றம், கூடும்போது பொதுவாக 4 நாட்கள் தான் மன்றம் நடைபெறும். அவையை எத்தனை நாள் நடத்துவது, என்னென்ன நாட்களில் எந்தப் பொருளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது என்பது பற்றியெல்லாம் சட்ட மன்றம் தொடங்கும் முதல் நாள் அன்று அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும். அலுவல் ஆய்வுக் குழுவிற்கு சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு முடிவினை எடுத்து, அதன்படி தான் நிகழ்ச்சிகள், விவாதங்கள் நடைபெறும்.

10.11.2008 அன்று அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்ற போது தோழமைக் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் சட்டப் பேரவையை நான்கு நாட்கள் என்பதற்குப் பதிலாக ஐந்து நாட்கள் நடத்த வேண்டுமென்று விரும்பினார்கள். அத்தனை நாட்கள் விவாதிப்பதற்கான பொருட்கள் இல்லை என்ற போதிலும் மற்றவர்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக ஐந்து நாட்கள் அவையை நடத்தவும் உடனே ஒப்புக் கொண்டோம். அவ்வாறே பேரவை ஐந்து நாட்கள் நடைபெற்றது.

ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் என் வரதராசன், அந்த கட்சியின் சட்டமன்றத் தலைவர் பாலபாரதி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு என்னை இல்லத்தில் சந்தித்தார்கள். நேற்றைய தினம் காலையிலே கூட நண்பர் உரா.வரதராசனும், நண்பர்களும் என்னை சந்தித்தார்கள். அந்தச் சந்திப்பில் கோயில்பட்டி போன்ற செய்திகள் பேசப்பட்டதே தவிர, அப்போது அவர்கள் சட்டமன்ற நாட்கள் பற்றி எதுவுமே குறையாகச் சொல்லவில்லை.

ஆனால் நேற்றைய தினம் அந்தக் கட்சியின் மாநிலச் செயற் குழுவிலேயே பரிசீலித்து எனக்கு ஒரு கடிதம் எழுதி, அதிலே மசோதாக்கள் மீது ஆழமான விவாதங்கள் நடைபெறும் அளவிற்கு கூட்ட நாட்களை நீட்டிக்காமல் நான்கு நாட்களாக சுருக்கியது சட்டமன்ற ஜனநாயகம் மறுக்கப்பட்டதாகவே தங்கள் கட்சி கருதுவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

சட்டமன்றம் நான்கு நாட்களாகச் சுருக்கப்படவில்லை. நான்கு நாட்கள் என்பது ஐந்து நாட்களாக அலுவல் ஆய்வுக் குழுவிலே மற்றவர்கள் கேட்டுக்கொண்ட காரணத்திற்காகவே நீட்டப்பட்டதே தவிர சுருக்கப்படவில்லை. அது மாத்திரமல்ல, மசோதாக்கள் விவாதிக்கப்பட்ட நேரத்தில் அவையை மேலும் ஒரு நாள் நீடிப்பு செய்ய வேண்டுமென்று எந்தக் கட்சியின் சார்பிலும் கோரப்படவும் இல்லை.

அப்பொழுது சும்மாயிருந்து விட்டு தற்போது வெளியே போய் மாநிலச் செயற்குழுவினைக் கூட்டி முடிவெடுத்து, அதனை எனக்கு கடிதமாக எழுதியதோடு ஏடுகளிலும் வெளியிடச் செய்திருக்கிறார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏதோ இப்போது புதிதாக சட்டமன்றக் கட்சியாக வந்த கட்சி அல்ல. அந்தக் கட்சியின் சார்பில் ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் பேரவையிலே இடம் பெற்றவர்கள். அப்போது சட்டமன்றம் எத்தனை நாட்கள் நடைபெற்றது. எதிர்கட்சி உறுப்பினர்கள் எவ்வளவு பேர் பேச அனுமதிக்கப் பட்டார்கள், ஜனநாயகம் எந்த அளவிற்குப் போற்றிப் பாதுகாக்கப்பட்டது. மசோதாக்களில் பேச எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டார்கள் என்ற அத்தனை விவரங்களையும் அவர்கள் அறிவார்கள்.

மற்றக் கட்சிகள் எல்லாம் ஆளுங்கட்சியின் மீது குறை சொல்லும் போது, நாங்கள் மட்டும் எப்படி அமைதியாக இருக்க முடியும் என்பதற்காகவே குறை கூறுகிறோம் என்றால் அதில் நாம் சொல்வதற்கு ஏதுமில்லை.

கேள்வி: சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை துணை அறிக்கையின் மீது கூட கட்சிக்கு ஒரு பிரதிநிதி மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டார்கள் என்ற மார்க்சிஸ்ட் கட்சி சொல்லியிருக்கிறதே?

பதில்: நான் அருமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்களை தோழமை உணர்வோடு கேட்டுக் கொள்கிறேன். கடந்த கால ஆட்சிகளில் நிதி நிலை துணை அறிக்கையின் மீது ஒரு கட்சியின் சார்பில் எத்தனை பேர் பேச அனுமதிக்கப்பட்டார்கள்?. அது மாத்திரமல்ல, எத்தனை முறை விவாதமின்றியே நிதி நிலை துணை அறிக்கை நிறைவேற்றப்பட்டது என் பதையெல்லாம் நாடு நன்கறியுமே? ஓ! அது அந்த (ஜெயலலிதா) ஆட்சிக் காலமோ? மன்னிக்கவும்.

எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு போதிய அளவிற்கு நேரம் ஒதுக்காமலா சட்டக்கல்லூரி மாணவர்கள் பிரச்சினையைப் பற்றிப் பேசவே ஒரு நாள் முழுவதும் ஒதுக்கப்பட்டது. இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி பேசுவதற்காகவே தீர்மானம் நிறைவேற்றுகின்ற அன்று ஒரு நாள் முழுவதுமாகவும், பிறகு ஒரு நாள் அதைப் பற்றி சந்தேகம் எழுப்பி அதன் மீது பேசிய வகையில் அரை நாளும் எடுத்துக்கொள்ளப்பட்டது?.

தோழமைக்கட்சிகளோ, எதிர்கட்சிகளோ பேசக் கூடாது என்ற நிலை திமுகவப் பொறுத்தவரையில் எப்போதும் கிடையாது. அதற்கு சான்றுதான். மின்சாரம் பற்றிய விவாதம் அவையிலே நடந்த போது அதிமுகவினரும் அதிலே கலந்து கொண்டு உரையாற்ற வேண்டுமென்பதற்காக நானே மூத்த அமைச்சர்களை எதிர்கட்சித் தலைவரின் அறைக்கே அனுப்பி எதிர்கட்சியினரை அவையிலே கலந்து கொண்டு விவாதத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டேன்.

கேள்வி: ஒரே நாளில் 19 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூறுகிறதே?

பதில்: ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் 10.5.2002 அன்று ஒரே நாளில் 21 மசோதாக்களும், 31.7.2004 அன்று ஒரே நாளில் 23 மசோதாக்களும் அதாவது 40 நிமிட நேரத்தில் எந்தவொரு எதிர்கட்சியும் பேசுவதற்கு வாய்ப்பளிக்காமல் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அப்போதெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஜனநாயகம் பாழ்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. இப்போது தெரிகிறது. சிந்தனை செய் மனமே! சீறுவதோ தினமே!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்வருக்கு பல் வலி-ஓய்வெடுக்க யோசனை:

இதற்கிடையே முதல்வர் கருணாநிதிக்கு பல் வலி ஏற்பட்டுள்ளதால் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+