மும்பை-சென்னை ரயிலில் கொள்ளையர்கள் அட்டூழியம்
சென்னை: மும்பையில் இருந்து சென்னை வந்த ரெயிலில் 30 பேர் கொண்ட கொள்ளை கும்பல் பயணிகளை உருட்டைக் கட்டைகளால் தாக்கிவிட்டு பெண்களிடம் நகைகளைப் பறித்துச் சென்றனர்.
ராஜஸ்தானைச் சேர்ந்த விமல் (48) சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
மகாராஷ்டிர மாநிலம் சோலாபூரில் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக விமல் தனது உறவினர்கள் கெளதம் சந்த் (57), அவரது மனைவி கமலாபாய் (55), லட்சுமி சந்த் (35), ராஜேஷ் (35), சாந்தா பாய் (58), பிரவீண் (25), கியான்சந்த் (23) ஆகியோருடன் சென்றார்.
இரு தினங்களுக்கு முன் இரவு 11 மணிக்கு சோலாபூரில் இருந்து சென்னை திரும்ப மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலி்ல் ஏறினர்.
நள்ளிரவு 1 மணியளவில் ரயில் கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டம், கானகாபுரா ரயில் நிலையம் அருகே நின்றது.
அப்போது திடீரென 30 பேர் கொண்ட கொள்ளை கும்பல் எஸ்-5 பெட்டியில் ஏறியது. கையில் உருட்டு கட்டைகளுடன் வந்த அந்தக் கும்பல் பெண்களின் கழுத்தில் கிடந்த நகைகளை பறித்தது.
ஆண்களை அடித்துத் தாக்கி பணத்தைப் பறித்தனர். அவர்களில் சிலரை பயணிகள் ஒன்று சேர்ந்த பிடிக்க முயன்றபோது உருட்டுக் கட்டைகளால் தாக்கிவிட்டு தப்பிவிட்டனர்.
அவர்களிடம் நகையை பறிகொடுத்த பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் இறங்கி விட்டனர்.
இந்த ரயில் சென்னை வந்து சேர்ந்தபோது நகைகளைப் பறிகொடுத்த சென்னை பயணிகள் பெரும் சோகத்துடன் வீடுகளுக்குத் திரும்பினர்.
இது குறித்து விமல் கூறுகையில்,
நள்ளிரவில் காட்டுப் பகுதியில் 30 நிமிடங்கள் ரயில் நின்றபோது தான் கொள்ளையர்கள் ஏறினர். பெண்கள் கழுத்தில் கிடந்த நகைகளைப் பறித்தனர். கமலாபாய் கழுத்தில் கிடந்த 40 கிராம் செயினை பறித்துச் சென்றுவிட்டனர்.
கொள்ளையர்கள் உடலில் எண்ணெய் தடவியிருந்தனர். இதனால் அவர்களை எளிதில் பிடிக்க முடியவில்லை.
இத்தனைக்கும் ரயிலில் பாதுகாப்புக்காக ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் இருந்தனர். ஆனால், அவர்கள் முழு போதையில் தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால் கொள்ளையர்கள் வந்து போனது கூட அவர்களுக்குத் தெரியாது.
நாங்கள் அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்தினோம். ஆனால், சத்தம் கேட்டு எழுந்த போதை போலீசார் டிரைவரிடம் சென்று, ரயிலை கிளப்புமாறு கூறிவிட்டனர்.
கொள்ளை சம்பவம் நடந்த கானகாபுரா பகுதியில் எல்லா ரயில்களுமே சிக்னலுக்காக நிறுத்தப்படுவது வாடிக்கை. இதைப் பயன்படுத்தியே திட்டமிட்டு கொள்ளை நடந்துள்ளது.
கர்நாடகத்தி்ல் நடக்கும் இந்தக் கொள்ளை நடப்பது மிகச் சாதாரணமாம். இந்தக் கொள்ளையர்களை போலீசார் கண்டுகொள்வதே கிடையாது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications