மணல் விவகாரம்- காற்றில் பறந்த அரசு வாக்குறுதி!
கரூர்: கரூர் அருகே உள்ள பஞ்சமாதேவியில் மணல் எடுக்கவும், லாரிகளை அங்கு இயக்கவும் மாட்டோம் என்று அரசு அதிகாரிகள் உறுதிமொழி அளித்திருந்தனர். அந்த உறுதிமொழியை அவர்கள் காற்றில் பறக்கவிட்டு செயல்பட்டதால் அதை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.
கரூர் அருகே உள்ளது பஞ்சமாதேவி. இங்கு வசிப்பவர் ஈஸ்வரன் . எலெக்ட்ரீசனாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சிவபிரகாஷ் (19). இவர் தந்தைக்கு தொழிலில் உதவியாக உள்ளார்.
நேற்று முன்தினம் சிவபிரகாஷ் பணி முடித்து வீட்டிற்கு தனது இரண்டு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது பஞ்சமாதேவி கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில் எதிரே வந்த மணல் லாரி மோதி உடல் நசுங்கி அதே இடத்தில் இறந்தார்.
இதனால் ஆவேசம் அடைந்த அந்த பகுதி பொது மக்கள் அதன் வழியாக வந்த மணல் லாரிகளை சிறை பிடித்தனர்.
மறியல் செய்தவர்களுடன் போலீசார், ஆர்டிஓ ஜெயராமன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இந்த வழியாக மணல் லாரிகள் செல்லாது என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி மொழி கூறப்பட்டது. இதனையடுத்து மூன்று மணி நேரமாக நடத்தப்பட்ட மறியல் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை முதல் அதே இடத்தில் மீண்டும் லாரிகள் ஓடத் தொடங்கின. இதனைக் கண்ட பொது மக்கள் ஆவேசம் அடைந்து அந்த வழியாக வந்த லாரிகளின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.
தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பொது மக்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் இதற்கு பொது மக்கள் மறுக்கவே 100 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனால் அந்த பகுதியில் பதற்றமாக காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications