பிரபாகரன் நாட்டை விட்டு தப்பி ஓடுவார்-பொன்சேகாq
கொழும்பு: கிளிநொச்சியை ராணுவம் நெருங்கி விட்டதால் தனது பதுங்கு இடத்திலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் விரைவில் தப்பி விடுவார் என்று இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சிங்கள நாளிதழான தினமினாவுக்கு அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், கிளிநொச்சியின் இதயப் பகுதியான விஸ்வமடுவை ராணுவம் நெருங்கி விட்டது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்போது 3000 வீரர்களே உள்ளனர். அவர்களிலிரும் 2000 பேர் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டவர்கள்.
இப்படிப்பட்ட நெருக்கடியில், இலங்கையை விட்டே பிரபாகரன் தப்பி விடும் வாய்ப்புகள் உள்ளன. மற்றவர்களில் சிலர் சரணடையக் கூடும்.
படகு அல்லது குறைந்த உயரத்தில் பறக்கக் கூடிய விடுதலைப் புலிகளின் விமானத்தில் ஏறி பிரபாகரன் தப்பக் கூடும். இதைத் தடுக்க கடற்படையும், விமானப் படையும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
பிரபாகரனுக்கு காயம்:
எங்களுக்குக் கிடைத்துள்ள உறுதியான தகவலின்படி பிரபாகரன் தற்போது காயமடைந்துள்ளார். மருந்துகள் கிடைக்காமல், ஒவ்வொரு பங்கராக அவர் இடம் மாறிக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார் பொன்சேகா.
ஆனால், பிரபாகரன் குறித்து இலங்கை எத்தனையோ முறை எவ்வளவோ செய்திகளை வெளியிட்டுள்ளது. அதில் எதுவும் உண்மையாக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தக் தகவலிலும் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்று உறுதி செய்ய முடியவில்லை.
புலிகள் படையில் 9,000 புதிய வீரர்கள்:
இதற்கிடையே, விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த செப்டம்பர் மாதம் 9000 இளம் வீரர்களை இயக்கத்தில் சேர்த்துள்ளதாகவும், அவர்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மனித உரிமை பிரிவு ஆசிரியர்களின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.