மதுரையில் யுஎஸ் டாலர் அச்சடிப்பு-பெண் கைது
மதுரை: மதுரையில் அமெரிக்க டாலர் நோட்டுக்களை கள்ளத்தனமாக அச்சடித்து விநியோகித்ததாக பெண் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் சங்கர் (45). கேரளாவை சேர்ந்த இவர் சில ஆண்டுக்கு முன்பு மதுரை வந்தார். இவரது வீட்டுக்கு கடந்த சில நாட்களாக ஒரு வாலிபர் கையில் பெரிய பையுடன் அடிக்கடி வந்து சென்றார்.
அவர் மீது அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து எஸ்.எஸ்.காலனி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சங்கர் வீட்டுக்கு சென்றனர். அவரிடம் விசாரித்தபோது, அவரது பெயர் சாகித் ராகின்(25) என்பதும், சொந்த ஊர் வாரணாசி என்றும் தெரியவந்தது.
2 பேரையும் திலகர் திடல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அமெரிக்க டாலர்களை அச்சடித்து அதை இந்திய பணமாக மாற்றி வந்தது தெரியவந்தது.
இவர்களுடன் கேரளாவை சேர்ந்த பத்மாவதி, எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த சீனிவாசன் ஆகியோரும் கூட்டாளிகளாக இருந்துள்ளனர். இவர்கள் கள்ளநோட்டை சங்கரின் வீட்டிலேயே அச்சடித்து வினியோகித்து இருக்கிறார்கள்.
இவர்கள் அச்சடித்தது போக, மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பலருக்கு அமெரிக்க டாலர் அச்சடிக்கும் முறை பற்றியும் சொல்லி கொடுத்து இருக்கிறார்கள்.
அவர்களுக்கு அச்சு கருவி, பேப்பர், ரசாயன பொருள், மை ஆகியவற்றையும் கொடுத்துள்ளனர். இப்படி கள்ள நோட்டு அச்சடிப்பது பற்றி கற்று கொடுக்க கணிசமான தொகையையும் வாங்கி இருக்கிறார்கள்.
விசாரணையைத் தொடர்ந்து, வீட்டில் இருந்த அமெரிக்க டாலர் அச்சடிக்கும் கருவிகள், டாலர் அச்சடிக்க பயன்படும் பேப்பர்கள், கறுப்பு மை பாட்டில்கள், கெமிக்கல் பவுடர்கள் மற்றும் மூலப்பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
இதனை அடுத்து சங்கர், சாகித் ராகின், சீனிவாசன், பானுமதி என்ற பத்மாவதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications