காவிரி டெல்டா மாவட்டங்களில் சூறாவளியுடன் கன மழை

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இன்னும் சில நாட்கள் மழை நீடித்தால் நெற் பயிற்கள் அழுகி விடும் நிலை உள்ளது.
சூறாவளியுடன் கன மழை:
இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதற்கேற்ப நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறாவளிக் காற்று வீசி வருகிறது. கன மழையும் வெளுத்து வாங்கி வருகிறது.
கடலூரிலும் சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்து வருவதால் நகரமே முடங்கிப் போயுள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
தஞ்சை நகரில் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். அவர்கள் நகராட்சிப் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் வீசிய சூறாவளிக் காற்றால் 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
புயல் சின்னம் வலுத்தது:
இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் முழுவதும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, வட இலங்கைக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. அது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. அதாவது புயல் சின்னம் வலுத்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கன மழை பெய்யும். கடலோர மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடலோர மாவட்டங்களில் கடற் கொந்தளிப்பு காணப்படுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்குப் போக வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
3ம் எண் புயல் எச்சரிக்கை கொடி:
புயல் சின்னம் வலுத்துள்ளதால் நாகை துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் காவிரி டெல்டா மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications