Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ஸ்பெக்ட்ரம்': ராசா பதவி விலக வேண்டும்-ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் மத்திய அமைச்சர் ராசா குற்றமற்றவராக இருந்தால், முதலில் பதவியில் இருந்து விலகி தன்னை விசாரணைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பல ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயார் என்ற மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அ.ராசாவின் கூற்று வேடிக்கை மிகுந்ததாக இருக்கிறது.

செல்போன் பணிகளுக்கான இரண்டாவது தலை முறை ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கான அனுமதியை சர்வதேச அளவில் ஏலம் விடுவதற்கு பதிலாக முதலில் வருபவருக்கு முதலில் தரப்படும்' என்ற அடிப்படையில் அளித்தார் என்ற குற்றச்சாட்டு ராசா மீது சுமத்தப்பட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல், 6.2 மெகா ஹெர்ட்ஸ் என்று நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கும் மேல் ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகளை ஒதுக்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கும் அவர் ஆளாகியுள்ளார்.

தனக்கு முன்பிருந்த அமைச்சர் பின்பற்றிய முறையில் இருந்து தான் விலகிச்செல்லவில்லை என்பது ராசாவின் வாதமாகும். இவருக்கு முன்பிருந்த அமைச்சரும் திமுகவை சார்ந்தவர்தான் என்பதாலும், அவர் பதவியில் இருந்து விலகும்வரை அந்த கட்சியின் தலைவரான கருணாநிதியின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு பணியாற்றியவர் தான் என்பதாலும், ராசாவின் கூற்றில் அதிக நியாயம் இருப்பதாக தெரியவில்லை.

நமது நாட்டில் உள்ள 22 தொலைபேசிப் பகுதிகளில் 13 தொலைபேசி பகுதிகளுக்கான பணிகளைத் துவக்க ஸ்வான் டெலிகாம் என்ற நிறுவனத்திற்கு ராஜாவின் அமைச்சகம் அனுமதி அளித்தது.

ராஜாவின் தயவால் பயனடைந்த மற்றொரு நிறுவனம் யுனிடெக் டெலிகாம். ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்காக விண்ணப்பிக்கும் போது, ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்களுக்கு தொலை தொடர்புத்துறையில் எந்தவித அடித்தளமோ, அனுபவமோ இல்லை. அப்படி இருந்தும், ரூ. 1,650 கோடி வீதம் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை இந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டது வினோதமாக இருக்கிறது.

இந்த கட்டணம் 2001ம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்டது. ஒதுக்கீடு செய்யப்பட்டதோ 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி. 7 ஆண்டுகள் முற்றிலும் முடிந்தும் தொலைத்தொடர்புத்துறையைச் சார்ந்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசையின் விலை மட்டுமே உயரவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.

யுனிடெக் டெலிகாம் நிறுவனம் தன்னுடைய மூல நிறுவனம் மற்றும் வங்கிகளில் இருந்து ரூ. 2,000 கோடி கடன் பெற்று அதிலிருந்து ஸ்பெக்ட்ரம் உரிமத்திற்கான ரூ. 1,650 கோடியை செலுத்தியுள்ளது.

159 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட உலகின் ஏழாவது மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான நார்வே நாட்டைச் சேர்ந்த டெலினார் என்ற நிறுவனம் யுனிடெக் டெலிகாம் நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை ரூ. 6,120 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், 22 வட்டங்களுக்கான உரிமத்தைப் பெற்று, அதன் பணியை இன்னமும் தொடங்காத யுனிடெக் டெலிகாம் நிறுவனத்தின் மதிப்பு ரூ. 11,620 கோடியாகும். சுருங்கச் சொன்னால், ரூ. 1,650 கோடி உரிமக் கட்டணத்தைச் செலுத்தி இந்திய உரிமத்தை பெற்றுக்கொண்ட யுனிடெக் நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு ரூ. 11,000 கோடிகளுக்கு மேல்!.

தங்களுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கப்படாததால், காகிதத்தில் மட்டுமே முகவரியைத் தாங்கியுள்ள லெட்டர் பேட் நிறுவனங்கள் என்று தெரிந்திருந்தும், நார்வே நாட்டைச் சேர்ந்த டெலினார் நிறுவனம் யாருக்குமே அறிமுகமில்லாத யுனிடெக் நிறுவனத்தில் ரூ. 6,000 கோடியை முதலீடு செய்யுமா?.

அல்லது எடிசலாட் நிறுவனம் ஸ்வான் நிறுவனத்தில் ரூ. 9,000 கோடியை முதலீடு செய்ய முன் வருமா?. டெலினார் மற்றும் எடிசலாட் நிறுவனங்களின் இது போன்ற முடிவிலிருந்து தொலைதொடர்பு ஜாம்பவான்கள் இந்திய தொலை தொடர்பு சந்தையில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

இந்தத் தேவையை பயன்படுத்திக் கொண்டு இரண்டாவது தலைமுறை ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கான உரிமத்தை சர்வதேச ஏலத்தில் அளித்து அதிக நிதியை மத்திய அரசு திரட்டியிருக்க முடியாதா?

இந்த இழப்புக்கு யார் பொறுப்பு? இந்தத்துறையைக் கையாளும் அமைச்சர் இதற்கு பொறுப்பில்லையா? இவருடைய நடவடிக்கைகள் மத்திய அரசுக்கு மிகப்பெரிய இழப்பீட்டை ஏற்படுத்தும் என்று இவருக்குத் தெரியாதா? இவருக்கு தெரியாது என்றால் முதலில் அந்த அமைச்சர் பதவியை வகிக்கவே லாயக்கற்றவர்.

இவருக்குத் தெரியும் என்றால், சுய லாபத்திற்காக நாட்டை அடகுவைக்கும் வகையில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஒப்பந்தம் நடைபெற்றிருக்கிறது என்பது தெளிவாகிறது. எந்தக் கோணத்தில் பார்த்தாலும், ராசா மந்திரி சபையிலிருந்து வெளியேறியே ஆக வேண்டும்.

இரண்டாவது தலைமுறை செல்போன் அலைவரிசை ஒதுக்கீட்டில் சர்வதேச ஏல முறையை பின்பற்ற மறுத்தது குறித்து கேள்வி எழுப்பியதோடு மட்டுமல்லாமல், தற்போது பின்பற்றப்பட்டுள்ள முறை சந்தேகப்படக்கூடியதாகவும், அரசியல் தொடர்புடன் கூடியதாகவும் இருக்கிறது என்று மத்திய கண்காணிப்பு ஆணையம் விமர்சித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் உச்சபட்ச அளவான 6.2 மெகா ஹெர்ட்ஸ் என்ற அளவுக்கு மேல் தொலை தொடர்புத்துறை ஏன் ஒதுக்கீடு செய்தது? என்ற வினாவையும் மத்திய கண்காணிப்பு ஆணையம் எழுப்பியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு குறித்த பொது நல வழக்கு ஒன்றை டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் நிரூபிக்கப்பட்டால் தான் பதவி விலகத் தயார் என்று ராசா வேடிக்கையான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அவர் குற்றவாளி என்று யார் நிரூபிக்க வேண்டும்? ஊடகங்களா? எதிர்க்கட்சிகளா? புலனாய்வு அமைப்புகளா? நீதிமன்றங்களா?.

மேற்படி அனைத்து அமைப்புகளும் அவர் குற்றவாளி என்று சொன்னால் பதவி விலகுவது என்ற கேள்விக்கு இடம் எங்கே இருக்கிறது? குற்றவாளி என்று சொல்லிவிட்டால் சிறைக் கம்பிகளுக்குப் பின் நின்றுகொண்டு கம்பி எண்ணுவதில் காலத்தை கழித்துக் கொண்டிருக்க வேண்டியது தான்!.

ராசா குற்றமற்றவராக இருந்தால், முதலில் பதவியில் இருந்து விலகி தன்னை விசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

தற்போதைய மதிப்பீடுகளின்படி, இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரூ. 60,000 கோடிக்கு மேல் இந்தியாவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப்பணத்தை வைத்துக் கொண்டு, தற்போது நியாய விலைக்கடைகளின் மூலம் வழங்கப்படும் ஒரு ரூபாய் அரிசியை 6 கோடி தமிழக மக்களுக்கு அடுத்த 83 ஆண்டுகளுக்கு இலவசமாகவே வழங்க முடியும்!.

இந் நிலையில் ராசா சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரை பதவி விலகச்சொல்வது அந்த சமுதாயத்திற்கு எதிரான மேல் சமுதாயத்தினரின் திட்டமிட்ட கூட்டு சதி என்று கருணாநிதி கூறுகிறார்.

இந்தியாவின் மூத்த அரசியல்வாதி என்று தன்னைத்தானே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அவர், தன்னுடைய குடும்பத்தினரின் சுயலாபத்துக்காக, அவர்களை பாதுகாப்பதற்காக இதுபோன்ற குற்றங்களுக்கு சாதிச்சாயம் பூசுவது வெட்கப்பட வேண்டிய விஷயம்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+