'ஓ! படப்பிடிப்பு முடிந்து விட்டதா?': கருணாநிதி
சென்னை: ரயிலில் இடம் பிடிக்க ஒருவருக்கொருவர் முந்திக் கொண்டு செல்வது மாதிரி, ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க இந்திய கம்யூனிஸ்டு கட்சி ரொம்பவும் அவசரப்படுகிறது என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு பிரச்சனை நீண்ட பல ஆண்டுகளாக இருந்து வருகின்ற பிரச்சினை. அது பற்றி திமுக ஆட்சியிலே தற்போது தான் நீதிபதி ஜனார்த்தனம் தலைமையிலே ஒரு குழு அமைக்கப்பட்டு, அவரிடம் இருந்து அறிக்கையினை விரைந்து பெற்று, அறிக்கை பெற்ற மறுநாளே அதுபற்றி ஓர் அறிக்கையும் அரசின் சார்பில் விரைவில் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் சார்பில் அறிக்கையே வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு நாங்கள் தான் காரணம் என்பதை போல வேறு சில கட்சிகளும் கூறிக் கொள்ள பார்க்கிறார்களே?
பதில்: இந்த அறிவிப்பை வரவேற்கும் கட்சிகளையும், தலைவர்களையும் வாழ்த்துகிறேன். குறிப்பாக இந்த கோரிக்கையில் முனைப்புடன் குரல் கொடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி என்பதை நான் மறக்க மாட்டேன். ஏற்கனவே என் வீட்டில் தாழ்த்தப்பட்ட சமூகத்து மருமகள்களும், மருமகன்களும் பல ஆண்டுகளுக்கு முன்பே சம்பந்தி உறவினர்களாகி விட்டார்கள் என்பதையும் பெருமிதத்துடன் எண்ணிப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கும் கூட என்னிடம் 24 மணி நேரமும் அணுக்கத் தொண்டனாக இருந்து என்னை கவனித்துக் கொள்வதே நித்யா என்ற ஒரு அருந்ததிய இளைஞன் தான்.
கேள்வி: தமிழகத்திலே உள்ள இலங்கை அகதிகளை திரும்பி அனுப்ப மத்திய அரசு அறிவித்திருப்பதைப் போல தா.பாண்டியன், நெடுமாறன் போன்றவர்கள் சொல்லியிருக்கிறார்களே?.
பதில்: அந்த செய்தியில் உண்மை இல்லை என்று உடனடியாக அரசின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு விட்டது. யுத்த நேரத்தில், உணர்ச்சிக்கு எளிதில் ஆளாகக் கூடிய இதுபோன்ற பிரச்சினைகளில் உண்மை எதுவென்று தெரியாமல் அவசரப்பட்டு அறிக்கை விட்டு, மக்களை குழப்பிவிடக் கூடாது.
இலங்கை பிரச்சினை குறித்து பலரும் பல கருத்துக்களை சொல்லி வருகிறார்கள். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எனக்கு கடிதம் மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் தொடர்ந்து பல்வேறு யோசனைகளை எல்லாம், என்ன செய்யலாம் என்பது குறித்து தெரிவித்து வருகிறார். அதற்கு நான் பதிலும் எழுதியுள்ளேன். அவர் கூறிய யோசனைகளை பற்றி தொடர்புடையவர்களிடம் எல்லாம் விரிவாக தொடர்ந்து விவாதித்து வருகிறேன். எப்படியோ எல்லோரும் சேர்ந்து இலங்கை தமிழர் அமைதியாக வாழ்ந்திட வழி வகுப்போம்.
கேள்வி: தங்கள் தோழமையில் ஒருசில ஆண்டுகளாக இருந்த கட்சிகள், தங்களிடம் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லாத நிலையில், காங்கிரஸ் கட்சியோடு தாங்கள் தோழமையாக நீடிப்பதையே ஒரு காரணமாக சொல்லி, கூட்டணி கட்சிகளையே மதிக்கத் தெரியாத ஜெயலலிதாவிடம் அணி சேரத் துடிப்பதைப் பற்றி?
பதில்: பயணம் செய்ய ரயிலுக்கு செல்பவர்கள், அதிலே இடம் பிடிக்க ஒருவருக்கொருவர் முந்திக் கொண்டு செல்ல நினைப்பதில்லையா? அது போன்றது தான் இதுவும்; தேர்தல் பயணமே தவிர லட்சியப் பயணம் அல்ல. தேர்தல் எப்போது என்று தெரியாத நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி போன்ற கட்சிகள் மிகவும் தான் அவசரப்படுகிறார்கள். ஜெயலலிதாவை சந்திக்க சென்றவர்கள், நல்லக்கண்ணு போன்றவர்களைக் கூட அழைத்து செல்லாமல் சென்றிருப்பதில் இருந்தே, அவர்களுடைய அவசரம் தெரியவில்லையா?
ஜெயலலிதாவின் அழைப்பின் பேரில் சென்றதாக பரதன் கூடச் சொல்லியிருக்கிறார். ஜெயலலிதா அழைக்கக் காரணம், அவருடைய கட்சியிலே உள்ளவர்கள் வேறு எங்கும் சென்று விடாமல் இருக்க, தான் ஏதோ சுறுசுறுப்பாக இருப்பதை போல காட்டிக் கொள்ளவும், மற்றக் கட்சிகள் எல்லாம் இவரிடம் சேர்ந்து கூட்டணி அமைக்க துடித்துக் கொண்டிருப்பதை போலவும் ஒரு நாடகத்தை அரங்கேற்ற பார்க்கிறார். அதற்கு ஒருசிலர் இரையாகின்றனர், அவ்வளவு தான்.
கேள்வி: காணவில்லை- தமிழக காவல்துறை'' என்ற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நாளேட்டில் அரை பக்கத்திற்கு கேலிச் சித்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளனவே?
பதில்: இதுவும் ரயிலை பிடிப்பதற்கான ஏற்பாடு தான்!. எப்படியாவது ஜெயலலிதா முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்து விட படாதபாடு படுகிறார்கள்.
கேள்வி: விலைவாசி உயர்வை திமுக மறைக்கிறது என்று தேமுதிக தலைவர் பேசியிருக்கிறாரே?.
பதில்: ஓ! படப்பிடிப்பு முடிந்து விட்டதா?
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications