அமெரிக்க நிதியமைச்சராகும் டிமோத்தி கீத்னர்

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராகப் பதவியேற்கிறார் ஒபாமா. அமெரிக்காவை பெரும் மந்தம் தாக்கியுள்ள நிலையில் அடுத்த நிதியமைச்சர் யார் என்பது உலகமே ஆவலாகப் பார்த்து வந்தது.
இந் நிலையில் அமெரிக்க ரிசர்வ் வங்கியின் நியூயார்க் பிரிவின் தலைவர் டிமோத்தி கீத்னரை அந்தப் பதவியில் நியமித்துள்ளார் ஒபாமா.
மேலும் வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகராக முன்னாள் நிதியமைச்சர் லாரன்ஸ் சம்மர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களைத் தவிர தேசிய பொருளாதார கவுன்சிலின் ஆலோசகரான கிரிஸ்டினா ரோமர், மெலோடி பேம்ஸ், ஹீத்தர் ஹிக்கின்பாதம் ஆரியோரை தேசிய திட்டக் கவுன்சிலின் நிர்வாகிகளாகவும் நியமித்துள்ளார்.
இதை சிகோகாவில் நிருபர்களிடம் அறிவித்த ஒபாமா, அமெரிக்க நிதி சிக்கலை அவ்வளவு சீக்கிரத்தில் தீர்த்துவிட முடியாது. ஆனாலும் நான் தேர்வு செய்துள்ள இந்த டீம் சிக்கலைத் தீர்ப்பதில் பெருமளவு உதவும். இவர்கள் அமெரிக்காவின் மிகச் சிறந்த பொருளாதார மூளைகள்.
நமது சவால்களை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது என்றாலும் அதை சமாளிக்கும் நமது திறமையையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, பொருளாதார கட்டமைப்பையும் மாற்றி அமைக்க வேண்டிய பெரும் பணி காத்திருக்கிறது. அதை இந்த டீமுடன் இணைந்து நிச்சயம் செய்வேன்.
குறுகிய கால லாபத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல் நீண்ட கால ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு நிதி நிறுவனங்கள், வங்கிகளை இயங்கச் செய்வதற்குத் தேவையான அனைத்து புதிய கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் வகுக்கப்படும், அவை தொய்வே இலலாமல் அமலாக்கப்படும்.
இதெல்லாம் சொல்வதற்கு எளிதி. செய்வது கஷ்டம் தான். ஆனால், செய்து தான் ஆக வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்ற நமக்கு வேறு வழியில்லை. இதற்காகத் தான் பொருளாதாரத்தை சீரமைக்க இந்த டீமை தேர்வு செய்துள்ளேன்.
இவர்கள் புதிய சிந்தனையாளர்கள், சிறந்த தலைமைப் பண்பு மி்க்கவர்கள், நமது பொருளாதாரத்தை கையாண்ட அனுபவம் கொண்டவர்கள், வால் ஸ்ட்ரீட்டை மட்டுமே (அமெரிக்க பங்குச் சந்தை) கவனித்துக் கொண்டிருக்காமல் மற்ற விஷயங்களையும் கவனிப்பவர்கள் என்றார் ஒபாமா.
அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சராக முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி நியமிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தப் பதவியை ஏற்க அவர் சம்மதித்துவிட்டார்.
வர்த்தக அமைச்சராக நியூ மெக்சிகோ கவர்னர் வில் ரிச்சர்ட்சன் நியமிக்கப்படவுள்ளார். இவர் அதிபர் பதவிக்கான ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான தேர்வில் ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்டு பின்னர் வாபஸ் பெற்றார்.
சுகாதார அமைச்சராக ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ஜேம்ஸ் ஜோன்ஸ் நியமிக்கப்பட உள்ளார்.
அதே போல அமெரிக்க அட்டர்னி ஜெனரலாக எரிக்ஹோல்டர் நியமிக்கப்படுகிறார். இவர் கிளிண்டன் நிர்வாகத்தில் நீதித்துறை உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
அரிசோனா மாகாண கவர்னர் ஜேனட் நபோலிடானோ அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்.
வேளாண்மைத் துறை அமைச்சராக தேசிய கருப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஜான் பாய்டு நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
அடுத்த பாதுகாப்பு அமைச்சர் யார் என்பதில் கடும் சஸ்பெண்ஸ் நிலவுகிறது. புஷ்ஷிடம் பாதுகாப்பு அமைச்சராக உள்ள ராபர்ட் கேட்சே அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications