சொத்து குவிப்பு வழக்கு-இந்திரகுமாரி விடுதலை
சென்னை: வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமாரி விடுதலை செய்யப்பட்டார்.
1991-96-ம் ஆண்டு காலத்தில் அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. இவர் மீது 2001-06-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சி கால இறுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் வழக்கு பதிவு செய்தனர்.
இந்திரகுமாரி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1 கோடியே 97 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, அவரது சட்ட ஆலோசகர் பாபு, டிரைவர் ஜீவா, உதவியாளர் துளசி ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
இவர்கள் 4 பேர் மீதும், ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகிவற்றின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குக்கான குற்றப்பத்திரிகை 11.5.06 அன்று சென்னை 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி சடையாண்டி விசாரித்தார். வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்புக்காக இந்திரகுமாரி உட்பட 4 பேரும் கோர்ட்டில் ஆஜரானார்கள்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை தகுந்த ஆதாரத்தோடு நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதால், 4 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார். இந்திரகுமாரி தரப்பில் மூத்த வக்கீல் வெங்கட்ராமன், வக்கீல் காட்வின் ஆகியோர் ஆஜரானார்கள்.
தற்போது இந்திரகுமாரி திமுகவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications