மும்பை தீவிரவாத தாக்குதல்: பிரதமருடன் அத்வானி ஆலோசனை
டெல்லி: மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங், பாஜக தலைவர் அத்வானி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாளுக்கு நாள் நாட்டின் நிலைமை மோசமாகி வருவதாக அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்.
மும்பை சம்பவத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரா முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக், பிரதமரைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இந்த சம்பவத்திற்கு பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
மகாராஷ்டிர அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் எனவும் தேஷ்முக்கிடம் உறுதியளித்தார்.
பிரதமருடன் அத்வானி ஆலோசனை:
மும்பை சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் அத்வானி.
அப்போது அவரிடம், ஒவ்வொரு நாளும் நாட்டில் நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. தீவிரவாதத்தைத் தடுக்க மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று கூறினார்.
சிவராஜ் பாட்டீல் விரைகிறார்:
மும்பை சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், என்.எஸ்.ஜி. இயக்குநர் ஜோதி கிருஷ்ணன் தத்துடன் மும்பை விரைந்தார்.
தீவிரவாதிகளின் தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது என்று கூறிய அவர், மகாராஷ்டிர அரசுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றார்.
போர் சூழல்-மகாராஷ்டிர முதல்வர்
மும்பையில் தற்போது போர் போன்ற சூழல் நிலவுவதாக மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக்கும், துணை முதல்வர் ஆர்.ஆர். பாட்டீலும் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் தேஷ்முக், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைத் தொடர்பு கொண்டு மும்பை நிலவரம் குறித்து விளக்கினார்.
பிரதமரின் பிரசாரம் ரத்து:
தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கின் டெல்லி தேர்தல் பிரசாரக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தெற்கு டெல்லியில் உள்ள அம்பேத்கர் நகரில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரேம் சிங்கை ஆதரித்து பிரதமர் மன் மோகன் சிங் பிரசாரம் செய்யவிருந்தார்.
ஆனால் மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து பிரசாரக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது.
டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கு 29ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதற்கான பிரசாரம் இன்றுடன் முடிவடைகிறது.
மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை:
இதற்கிடையே, மும்பை தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூடி அவசர ஆலோசனை நடத்தியது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், மும்பை நிலவரம் குறித்து அமைச்சரவையிடம் விளக்கிக் கூறினார்.












Click it and Unblock the Notifications