மழை: உயிரிழந்தோருக்கு ரூ.1லட்சம் நஷ்ட ஈடு
சென்னை: தமிழகத்தில் சமீபத்திய மழையால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மழை சேதங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலைக் கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதன் பின்னர், தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த மாதம் 15ம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. இந்த பருவமழைக்கு தமிழகம் முழுவதும் இதுவரை 64 பேர் பலியாகி யுள்ளனர். 121 கால்நடைகளும் இறந்துள்ளன. 3089 குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர், கடலூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சமும், எருமை, பசு, எருது போன்றவை பலியாகியிருந்தால் தலா ரூ.10,000, ஆடுகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு தலா ரூ.2000 நிவாரணம் வழங்கப்படுகிறது.
மழையால் மாநிலம் முழுவதும் 64,531 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 3028 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதுவரை 17 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு, 1681 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 20,700 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் சுமார் 50,000 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி யுள்ளன. தண்ணீர் வடிந்தவுடன் சேத மதிப்பு தெரிய வரும். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து நீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. நிவாரணத் தொகைக்காக அரசு சார்பில் ரூ.23 கோடி 34 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications