குரு: குண்டாஸ் ரத்து; மீண்டும் திமுக-பாமக கூட்டணி?
சென்னை: குண்டர் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டிருந்த பாமக முக்கியத் தலைவர் காடுவெட்டி குரு விடுதலை செய்யப்பட்டார். இது தொடர்பான அரசு ஆணை நேற்று பிறப்பிக்கப்பட்டது.
வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் காடுவெட்டி குரு. இவர் கடந்த ஐனவரி 7ம் தேதி அரியலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். இது பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகவும் வன்முறையைத் தூண்டுவதாகவும் இருந்தது எனக் கூறி தேசிய பாதுகாப்புச் சண்டம் குண்டாஸில் கைது செய்தது தமிழக அரசு. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
மேலும் அதிமுக பிரமுகர் குணசேரன் என்பவர் கொடுத்த மிரட்டல் புகார் தொடர்பாக கடந்த ஜூலை 5ம் தேதி கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் வைக்கப்பட்டு இருந்தார். அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டபிறகு, அங்குள்ள தனி சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த 5 மாத காலமாக அவர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
தன்னை சிறையில் அடைக்க பிறப்பித்த ஆணையை நீக்கி, தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று குருவும், அவரது ஆதரவாளர் ஆதி ராமசாமி என்பவரும் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், குருவை சிறையிலடைத்தபோது இருந்த நிலைமைகள் இப்போது இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு அவருக்கு எதிராகச் சிறையிலடைக்கப் பிறப்பித்த ஆணையை நீக்குவதற்கு முடிவு செய்திருப்பதாக நேற்று அரசாணையை கவர்னர் பர்னாலா பிறப்பித்தார்.
மீண்டும் பேசக் கூடாது:
இதன்படி, 1980ம் ஆண்டு தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் 14-வது பிரிவில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களின் கீழ், குருவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட, சிறையிலடைக்கும் ஆணையை தமிழக ஆளுநர் பர்னாலா தனது உத்தரவின் மூலம் நீக்கியுள்ளார். இது தொடர்பான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.
அந்த உத்தரவில், குரு மற்றும் ஆதி. ராமசாமி ஆகியோரின் அறிக்கைகளை கவனமாக பரிசீலித்து பார்த்ததிலும், அரியலூர் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கொடுத்த அறிக்கைகளையும் வைத்து பார்த்ததிலும், குரு கைது செய்யப்பட்டபோது இருந்த சூழல் இப்போது இல்லை என்பதால் அவர் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கும் ஆணையை விலக்கிக் கொள்வது என அரசு முடிவு செய்துள்ளது. எனினும், அவர் மீண்டும், முன்பு பேசியது போல் பேசக்கூடாது என்று நிபந்தனையும் விதிக்கப்படுகிறது.
குரு மீது அரியலூர் காவல் நிலையத்தில் ஏற்கெனவே 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளுக்காகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான ஜாமீன் மனுக்கள், நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. அதில் ஒன்று அரியலூர் கோர்ட்டில் இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. மற்றொரு வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் வரும் வெள்ளிக்கிழமை (நாளை) விசாரணைக்கு வருகிறது. இவற்றில் அவருக்கு விடுதலை கிடைத்தால் இந்த வார இறுதிக்குள் குரு வெளியே வந்துவிடுவார்.
மீண்டும் பாமக-திமுக கூட்டணி:
மீண்டும் பாமகவுடன் கூட்டணி சேர தீவிரம் காட்டி வரும் திமுக குரு மீதான நடவடிக்கைகையை ரத்து செய்துள்ளது. இதனால் கூட்டணிக்காக வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.












Click it and Unblock the Notifications