மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 49 ஆனது
சென்னை: தமிழ்நாட்டில் மழைச்சாவு எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துவிட்டது.
வங்க கடலில் உருவான நிஷா என்ற புயல் காரணமாக தமிழ் நாட்டிலும், புதுச்சேரியிலும் கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழைக்கு நேற்று முன்தினம் வரை 28 பேர் பலியாகினர். நேற்று மேலும் 21 பேர் இதில் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 49 ஆக உயர்ந்து விட்டது.
சென்னை அமைந்த கரை புல்லா ரெட்டி அவென்யுவில், மழை சூறாவளி காரணமாக, மரம் ஒன்று ஒடிந்து, ரோட்டில் சென்ற ஆட்டோ மீது விழுந்தது. இதில் ஆட்டோ அப்பளம் போல் நசுங்கியது. இந்த விபத்தில், என்.எஸ்.கே. நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சார்லஸ் இறந்தார்.
நாகை மாவட்டத்தில் மழைக்கு இதுவரை 7 பேர் பலியானார்கள்.
கடலூரை அடுத்த ரெட்டிச்சாவடி வடபுரம் கீழ்பாதியில், வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் அய்யனார்(36) என்ற வாலிபர் இறந்தார்.
காட்டு மன்னார் கோவில் அருகே உள்ள விருதாங்கநல்லூரில், சுவர் இடிந்து விழுந்ததில் ராஜாமணி(60) என்ற பெண் இறந்தார். இந்த தகவலை கேட்ட அவரது கணவர் ராஜமாணிக்கமும் அதிர்ச்சியில் இறந்தார்.
கடலூர் காரைக்காட்டில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் நடேசன் என்பவர் பலியானார்.
தாயின் காலடியில் மகள் பிணம்:
சேலம் மாவட்டம் தலை வாசல் அருகே உள்ள வேப்பம் பூண்டி கிராமத்தை சேர்ந்த ரம்யா என்ற 6&ம் வகுப்பு மாணவி(9), பள்ளி முடிந்து, வீட்டுக்கு திரும்ப காட்டாற்று வெள்ளத்தை கடந்தாள். அப்போது அவளை வெள்ளம் அடித்து சென்று விட்டது.
இதுபற்றி அறிந்த ரம்யாவின் தாய் ராணி, காட்டாற்றுக்குள் இறங்கி மகளை தேடினார். அப்போது, ஏதோ ஒன்று, ராணியின் காலில் தட்டுப்பட்டது. குனிந்து தூக்கி பார்த்த போது, அது அவரது மகளின் பிணம் என்பதை கண்டு கதறி அழுதாள். அதை சோகத்துடன் கரைக்கு தூக்கி வந்தாள்.
தாம்பரத்தை அடுத்த சேலையூர் மப்பேடு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (38) மீது மின்சார கம்பி அறுந்து விழுந்தது. இதில் அவர் உயிர் இழந்தார். மதுராந்தகத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாடியில் தங்கி இருந்த மழை நீரை காவலாளி பாலாஜி அகற்றினார். அப்போது தண்ணீரில் கசிந்து இருந்த மின்சாரத்தால் அவர் தாக்கப்பட்டு இறந்தார்.
கும்பகோணம் பகுதியில் உள்ள நரசிங்கன் பேட்டையில், வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் விஜயத்தம்மாள் என்ற பெண்ணும், முள்ளுக்குடியில் வேம்பு (40) என்பவரும் இறந்தனர்.












Click it and Unblock the Notifications