ஜெகதாப்பட்டினத்தில் உள்வாங்கிய கடல்! மக்கள் பீதி!!
ஜெகதாப்பட்டினம்: புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தில் 25 அடி தூரம் கடல் உள் வாங்கியதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வங்க கடலில் ஏற்பட்ட குறைவான காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடலோர பகுதிகளான ஜெகதாப்பட்டனம், மீமிசல், கட்டுமாவடி, மணல்மேல்குடி, ஆகிய பகுதிகளில் மழை காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. பல தனியார் நிறுவனங்கள், பள்ளி , கல்லூரிகள் மழை காரணமாக விடுமுறை விடுத்துள்ளது. தொடர் மழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக ஜெகதாப்பட்டினத்தில் கடல் 25 அடி நேற்று உள்வாங்கியது. இதனால் மீனவர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.
மேலும், கடலோரத்தில் உள்ள கிராமங்களில் கடல் நீர் புகுந்தது. இதனால் பலர் வீட்டை விட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சையில் 179 வீடுகள் இடிந்து நாசம்:
தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 179 வீடுகள் மழைக்கு இடிந்து விழுந்தது.
திருவையாற்றில் 11 வீடுகள், திருக்காட்டுப்பள்ளியில் 18 வீடுகள், அதிராம்பேட்டையில் 27 வீடுகள், நடுக்காவிரியில் 133 வீடுகள் என மொத்தம் 179 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தது.
வீடு இழந்தவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிர் தேதம் ஏதும் ஏற்படவில்லை.
அந்தளி கிராமத்தை வெள்ளம் சூழந்துள்ளதால் அந்த பகுதி மக்களை புலிமாத்தூர் தொடக்கப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை மாவட்ட கலெக்டர் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு அனைத்து உதவிகளும் கிடைக்க உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்கேயே உணவு சமைத்து வழங்கப்பட்டது.
உயிர் தப்பிய எஸ்.பி:
புதுக்கோட்டையில் மழையிலிருந்து மக்களைக் காக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க புறப்பட்டுச் சென்ற எஸ்.பி. கார் அருகில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் எஸ்.பி. மூர்த்தி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அவருடன் சென்ற போலீசாரும் உயிர் தப்பினார்கள்.












Click it and Unblock the Notifications