பேய் மழை: வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம்
சென்னை: சென்னை தவிர, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி உட்பட பல இடங்களில் பலத்த சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது.
கடலூர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த பரவனாற்றின் கரையோரத்தில் உள்ள பூதம்பாடி, ஓனாங்குப்பம், கல்குணம், பரதம்பட்டு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காட்டுமன்னார்கோயிலை சுற்றியுள்ள பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. நந்திமங்கலம், கீழக்குண்டலபாடி, மேலக்குண்டலபாடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மாவட்டத்தில் 300 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
என்எல்சி மின் உற்பத்தி பாதிப்பு:
நெய்வேலியில் என்எல்சியின் 3 சுரங்கம், 3 அனல் மின் நிலையங்கள் உள்ளன. கடந்த 3 நாட்களாக பெய்யும் தொடர் மழையால், என்எல்சியின் 3 சுரங்கங்களும் மழை நீரால் சேறும், சகதியுமாக மாறிபோனது.
சுரங்கங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. இதனால், உற்பத்தியும் படிப்படியாக குறைந்து வருகிறது. முதல் அனல் மின் நிலையத்தில் முற்றிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.இரண்டாம் அனல் மின் நிலையத்தில் நேற்று மாலை நிலவரப்படி 180 முதல் 200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த உற்பத்தி, நிலக்கரி, பர்னஸ் ஆயில் மூலமே செய்யப்படுவது குறிப்பிடித்தக்கது.
கரைந்தன 1 லட்சம் உப்பு மூட்டைகள்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் நேற்று மதியம் சூறாவளிக்காற்றுடன், பலத்த மழை பெய்ததால் கோடியக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து 10க்கும் மேற்பட்ட படகுகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. கடல்நீர் மற்றும் மழைநீர் அகஸ்தியம்பள்ளி உப்பள பகுதிகளில் புகுந்ததால் 1 லட்சம் மூட்டை உப்புகள் நீரில் கரைந்தன. மேலும் தளவாட சாமான்கள் சேதமடைந்தன.
ரயில்கள் ரத்து:
தொடர் மழை காரணமாக மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடிக்கு இயக்கப்படும் 8 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டஙகளில் மழையால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications