தென்றல் வாழ்க்கையில் வில்லனாக வந்த பொருளாதார நெருக்கடி!
சென்னை: சுரேஷும், மாலதியும், இப்படி ஒரு நிலைமை ஏற்படும் என கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி என்ன நடந்து விட்டது என்று கேட்கிறீர்களா, தொடர்ந்து படியுங்கள்.
கோவையைச் சேர்ந்தவர் சுரேஷ். எம்.பி.ஏ படித்தவர். அவருக்கும் மாலதிக்கும் செப்டம்பரில் திருமணமானது.
சுரேஷ் ஒரு முன்னணி நிறுவனத்திற்குச் சொந்தமான நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மாலதிக்கு, எச்.டி.எப்.சி வங்கியின் ரீடெய்ல் வங்கிப் பிரிவில் கேஷியர் வேலை.
திருமணத்திற்குப் பின்னர் கணவனும், மனைவியுமாக சொந்த வீடு கட்ட ஆசைப்பட்டனர். அவர்களின் கனவும் பலித்தது, வீடும் வளர ஆரம்பித்தது.
வீடு மட்டும் கட்டினால் போதுமா, கண் கவர் பர்னிச்சர்கள், இத்யாதி, இத்யாதிகளை வாங்க வேண்டாமா. ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை செலவழித்து ஆசை ஆசையாக ஏகப்பட்ட ஐட்டங்களை வாங்கிப் போட்டார் சுரேஷ்.
அப்புறம் ...?:
எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருந்தது. அந்த சமயத்தில்தான் திடீரென 'வில்லன்' குறுக்கிட்டான் சுரேஷ் மாலதி வாழ்க்கையில்.
ஒரு 'நல்ல நாளாகப்' பார்த்து சுரேஷை வேலையை விட்டு நீக்கியது அவர் வேலை பார்த்து வந்த நிதி நிறுவனம். தலையில் இடி விழுந்தது போன்ற நிலைக்கு ஆளானார் சுரேஷ்.
அது மட்டுமா, மாலதியின் வேலைக்கும் விழுந்தது அடி. அவருக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத ஒரு வேலையைப் பார்க்குமாறு வங்கி பணிக்க, என்ன செய்வதென்று தெரியாமல், வேலையை ராஜினாமா செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது மாலதிக்கு - அவரும் ராஜினாமா செய்தார்.
ஏன் இப்படி ...?:
கோபத்துடன் காணப்படும் சுரேஷ் இப்படிக் கூறுகிறார் .. உலகளாவிய பொருளாதார நெருக்கடி, ஆள் குறைப்பு போன்ற செய்திகள் சூடாக பரவிக் கொண்டிருந்ததால், கடந்த அக்டோபர் எனது எச்.ஆர் மேனேஜரை பார்த்து எங்களது பணி பாதுகாப்பு குறித்து கேட்டேன். அதற்கு அவர், எந்தவித ஆள் குறைப்பும் இருக்காது என்று உறுதியளித்தார்.
ஆனால் இப்போது சொல்லாமல் கொள்ளாமல் வேலையை விட்டு நீக்கி விட்டனர். முன்பே இதுகுறித்து கூறியிருந்தால் நான் அதற்கேற்ப தயாராகியிருப்பேன். நிலைமையை சமாளிக்க ஆயத்தமாகியிருப்பேன் என்கிறார் வேதனையுடன்.
கடந்த 2 மாதங்களாகவே கடன் வழங்குதலில் தேக்க நிலை. காரணம், பொருளாதார நெருக்கடி. சுரேஷ் வேலை பார்த்த நிறுவனத்தில் மட்டுமல்லாமல், உலகெங்கும் இந்த நிலைதான்.
இந்த நிலையில், அதைக் காரணம் காட்டிய சுரேஷ் நிறுவனத்தின் தலைவர், வேறு எந்தப் பிரிவுக்கும் உங்களை மாற்ற முடியாது. எனவே வேலையை விட்டு நீக்குகிறோம் என்று காரணம் கூறியுள்ளாராம்.
எந்தவித முன்னறிவிப்போ அல்லது இழப்பீடோ இல்லாமல் சட்டென்று சுரேஷ் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் நிறுவனத்தின் பக்கம் தவறு இல்லை என்பதைக் காட்டிக் கொள்வதற்காக, சுரேஷின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று காரணம் கூறி அவரை வேலையை விட்டு நீக்கியுள்ளனராம். அந்த நிறுவனத்தின் 60 சதவீத ஊழியர்கள் விரைவில் நீக்கப்படவுள்ளனராம்.
இது சுரேஷின் நிலை. மாலதியின் நிலையோ மகா கவலைக்கிடம்.
அவர் செஞ்சூரியன் பாங்க் ஆப் பஞ்சாபில் வேலை பார்த்து வந்தார். இந்த நிறுவனத்தை ஐந்து மாதங்களுக்கு முன்பு எச்.டி.எப்.சி எடுத்துக் கொண்டது.
பஞ்சாப் பேங்க்கில் கேஷியராக இருந்து வந்த மாலதியை, திடீரென சேமிப்புக் கணக்கு தொடங்குவது தொடர்பான பணிக்கு மாற்றம் செய்தது வங்கி நிர்வாகம். ஆனால் இதில் அவருக்கு சுத்தமாக பயிற்சியோ, அனுபவமோ இல்லை என்பதால் வேலையே பார்க்க முடியாத நிலை.
இதையடுத்து வேறு வழியில்லாமல் வேலையை விட நேரிட்டது மாலதிக்கு.
இப்படி நட்டாற்றில் விடப்பட்ட சுரேஷுக்கு சொந்த ஊரான கோவைக்குப் போய் தந்தையின் பிசினஸில் இணைவதைத் தவிர வேறு வழியில்லை.
வீட்டைக் கட்டி, லட்சக்கணக்கில் பொருட்களையும் வாங்கிக் குவித்து விட்ட நிலையில், வேலை இல்லை என்ற குழப்பமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சுரேஷும், மாலதியும் விரைவில் கோவைக்கே திரும்பிச் செல்லவிருக்கிறார்களாம்.
பொருளாதார நெருக்கடியும், ஆள் குறைப்பு நடவடிக்கைகளும் தலைக்கு மேல் தொங்கும் கத்திகளாக மாறியுள்ளதால், கைக்கு மீறி செலவு செய்வோருக்கு சுரேஷ், மாலதி ஒரு பாடமாக அமைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications