மும்பை தாக்குதலில் தமிழக வங்கி அதிகாரி பலி
மும்பை: மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார்.
மயிலாடுதுறையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மும்பையில் உள்ள ஸ்டேட் வங்கியின் வெளிநாட்டுப் பிரிவில் உதவிப் பொது மேலாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் கொலாபாவில் உள்ள காபி டே போல்ட் ஹோட்டலுக்கு 3 நண்பர்களுடன் சாப்பிடச் சென்றார்.
அப்போது திடீரென அங்கு தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். இதையடுத்து ஹோட்டலில் இருந்தவர்கள் அனைவரும் தரையில் படுத்துக் கொண்டனர். சிறிது நேரம் கழித்து கோபாலகிருஷ்ணன் எழுந்து பார்த்தபோது 2 தீவிரவாதிகள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் தலையில் குண்டு பாய்ந்து அவர் அந்த இடத்திலேயே இறந்தார்.
இரவு 10.30 மணிக்கு அவரது செல்போனை நண்பர் சுரேஷ் என்பவர் தொடர்பு கொண்டார். அப்போது வேறு ஒருவர் அதை எடுத்து நடந்த சம்பவத்தை விளக்கினார். கோபாலகிருஷ்ணன் இறந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், மகன், மகள் உள்ளனர். மகன் அமெரிக்காவில் படித்து வருகிறார். மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications