பாக் உளவு அமைப்பின் ஐஎஸ்ஐயின் அரசியல் பிரிவு மூடல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் அரசியல் பிரிவை மூடி விட்டதாக அந்நாட்டு பிரதமர் யூசுப் ரஸா கிலானி கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் அரசியல் பிரிவை மூட வேண்டும் என நீண்ட நாட்களாக இருந்து வந்த கோரிக்கையை ஏற்று அதை மூட பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் ஐஎஸ்ஐயின் செயல்பாடுகள் இனி மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாகிஸ்தானில் கிலானி தலைமையில் அமைந்த அரசு 2 மாதங்களுக்கு முன்பு, ஐ.எஸ்.ஐ.யை உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயற்சித்தது. ஆனால் ராணுவத்திடமிருந்து அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த நடவடிக்கை தோல்வியில் முடிந்தது என்பது நினைவிருக்கலாம்.
தற்போது ஐ.எஸ்.ஐ.யின் அரசியல் பிரிவை பாகிஸ்தான் அரசு மூடி விட்டது. இதன் மூலம் பாகிஸ்தான் அரசின் கொள்கைகளில் பெரும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ,யின் அரசியல் பிரிவு, கடந்த 30 வருடங்களாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு அரசியல் குழப்பப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
உள்நாட்டு அரசியலில் அரசியல் கூட்டணிகளை உடைப்பது, கட்சிகளை கூட்டணி சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் அது ஈடுபட்டு வருகிறது.
கடந்த 1988ம் ஆண்டு, பெனாசிர் பூட்டோவுக்கு எதிராக இஸ்லாமி ஜமூரி இதிஹாத் என்ற கூட்டணியை உருவாக்க ஐ.எஸ்.ஐதான் உதவியது.
அதேபோல, 2002ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு சாதகமாக பல வேலைகளில் ஐ.எஸ்.ஐ. ஈடுபட்டது. நவாஸ் ஷெரீப் தலைமையில் இருந்த பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கை உடைத்து, ஒரு பிரிவை முஷாரப்பிடம் கொண்டு போய் சேர்த்தது ஐ.எஸ்.ஐதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபட்டு வரும் அரசியல் பிரிவை உடனடியாக கலைக்க வேண்டும் என்று கிலானி அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்தே அந்த நடவடிக்கையில் கிலானி ஈடுபட்டார்.
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஐ.எஸ்.ஐ.யை தீவிரமாக ஈடுபடுத்த கிலானி அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பது பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கே கேள்விக்குறியாக உள்ளது.












Click it and Unblock the Notifications