பாக். திடீர் பல்டி - ஐ.எஸ்.ஐ. தலைவருக்குப் பதில் பிரதிநிதியை அனுப்புகிறது
இஸ்லாமாபாத்: மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு ஐ.எஸ்.ஐ. தலைவராக அனுப்ப முதலில் ஒத்துக் கொண்ட பாகிஸ்தான் அரசு தற்போது திடீர் பல்டி அடித்துள்ளது. ஐ.எஸ்.ஐ தலைவருக்குப் பதில் பிரதிநிதி ஒருவரை அனுப்புவதாக அது கூறியுள்ளது.
நேற்று இரவு அதிபர் ஆசிப் அலி சர்தாரி, ராணுவத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி, பிரதமர் யூசுப் ரஸா கிலானி ஆகியோர் நடத்திய அவசர ஆலோசனையின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இரவு தொடங்கிய இந்தக் கூட்டம் இரவு 1.30 மணி வரை நீடித்தது.
பின்னர் பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஐ.எஸ்.ஐ சார்பில் ஒரு பிரதிநிதி இந்தியா செல்வார். ஐ.எஸ்.ஐ. இயக்குநர் லெப்டினென்ட் ஜெனரல் ஷூஜா பாஷா செல்ல மாட்டார்.
ஐ.எஸ்.ஐ. பிரதிநிதி, மும்பை தாக்குதல் தொடர்பான இந்திய விசாரணைக்கு உதவுவார் என்றார்.
இந்தத் தாக்குதலில் இரு உளவுப் பிரிவினரும் கொல்லப்பட்டிருப்பதால் பாகிஸ்தானுக்கு அமெரிக்க தரப்பில் இருந்து நெருக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் தான் இந்த பிரதிநிதியை அனுப்பக் கூட பாகிஸ்தான் முன் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டியது. உடனே அதற்கு ஆதாரம் கோரியது பாகி்ஸ்தான். இதையடுத்து ஐஎஸ்ஐ தலைவரை வரச் சொல்லுங்கள், எல்லா ஆதாரங்களை தருகிறோம் என இந்தியா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.