மும்பை தாக்குதல் விசாரணை: இந்தியாவுக்கு முழு ஆதரவு - புஷ் உறுதி
வாஷிங்டன்: மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணையில் இந்தியாவுக்கு அமெரிக்கா முழு ஆதரவும், உதவிகளையும் அளிக்கும் என்று அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தேங்க்ஸ் கிவிங் தினத்தையொட்டி விடப்பட்ட விடுமுறையைக் கழிப்பதற்காக, கேம்ப் டேவிட்டுக்கு மனைவி லாராவுடன் சென்றிருந்தார் புஷ்.
அங்கிருந்தபடி அவர் மும்பை தாக்குதல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு. உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்காவை இந்தியா முழுமையாக நம்பலாம். இந்தியாவுக்குத் தேவையான உதவிகளையும், முழு ஆதரவையும் அமெரிக்கா வழங்கும். இந்தியாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும்.
இந்த மாபெரும் துயரத்தை இந்தியா நிச்சயம் தாங்கிக் கொள்ளும், சமாளித்து எழுந்து நிற்கும். தீவிரவாதத்திற்கு ஒருபோதும் வெற்றி கிடைக்காது என்று கூறியுள்ளார்.
முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சர் கான்டலீசா ரைஸ் மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் முல்போர்ட், மும்பையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் பால் போல்ம்ஸ்பீ மற்றும் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மும்பை சம்பவம் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினார் புஷ்.
பின்னர் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார் புஷ். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் உள்ள அமெரிக்க குடிமக்கள் பாதுகாப்புடன் உள்ளனர் என்பதை உறுதி செய்யும் வகையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அதிபர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பாரக் ஓபாமாவுக்கும் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மும்பை தாக்குதல் தொடர்பான விசாரணையில் இந்தியாவுக்கு, அமெரிக்கா முழு அளவில் உதவிகளைச் செய்யும். தவறு செய்த குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் அமெரிக்கா உதவி செய்யும்.
மும்பையில் நடத்திய தீவிரவாதிகளின் தாக்குதல் மிகக் கொடுமையானது, கொடூரமானது. ஆனால் தீவிரவாதத்திற்கு ஒருபோதும் வெற்றி கிடைக்காது.
இந்திய மக்கள் மிகவும் உறுதியானவர்கள். மிக வலுவான, பல இனங்களைக் கொண்ட, உறுதியான ஜனநாயகத்தை கடைப்பிடித்து வரும் நாடு இந்தியா. இந்த துயரத்தை இந்திய மக்கள் எளிதாக சமாளிப்பார்கள் என்றார் புஷ்.












Click it and Unblock the Notifications