உள்துறை அமைச்சர்-மனமில்லாமல் ஏற்ற ப.சிதம்பரம்?
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே உள்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்கிறேன் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இதன் மூலம அவர் புதிய பொறுப்பை ஏற்பதில் அதிருப்தியுடன் உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.
சிவராஜ் பாட்டீல் பதவி விலகியதைத் தொடர்ந்து ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக்கப்பட்டுள்லார்.
இந்த நிலையில், இன்று அவர் நிதியமைச்சராக கடைசி செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், புதிய பொறுப்பை நான் விரும்பி ஏற்பதாக கூற விரும்பவில்லை. ஆனால் கட்சித் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் எடுத்த இறுதி முடிவு. எனவே இதை ஏற்கிறேன்.
எனது அரசியல் வாழ்வில் நான் எதிர்பாராத நிகழ்வு இது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து திருப்திகரமான பாதையில் செல்லும். பண வீக்கம் மட்டுப்படும்.
நான்கு ஆண்டு திருப்திகரமான வளர்ச்சிக்குப் பின்னர், இந்த ஆண்டை நிகழ்வுகள் குறைந்த ஆண்டாக எதிர்பார்த்தேன். ஆனால் எனது அரசியல் வாழ்க்கையிலேயே நான் மிக அதிகமான நிகழ்வுகளை ( பணவீக்கம், விலைவாசி உயர்வு) சந்தித்த ஆண்டாக இது அமைந்து விட்டது.
நிதியமைச்சகத்தில் நான் செய்ய வேண்டிய வேலைகள் சில பாக்கி உள்ளன. இருப்பினும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், பணவீக்கம் விரைவில் மட்டுப்படும். பொருளாதார வளர்ச்சி திருப்திகரமான வகையில் இருக்கும்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பிரதமர் இருந்துள்ளார். திட்டக் கமிஷன் துணைத் தலைவராக இருந்துள்ளார். நிதியமைச்சராகவும் இருந்துள்ளார்.
நிதியமைச்சகத்தில் இந்த மூன்று துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அவர் இந்த மூன்று பொறுப்புகளையும் வகித்துள்ளார். இதனால் நிதித்துறையை கவனிக்க இவரை விடச் சிறந்தவர் யார் இருக்கிறார்கள் என்றார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications