பெங்களூரி்ல் அசிங்கப்பட்ட அச்சுதானந்தன்
பெங்களூர்: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் வீர மரணம் அடைந்த கேரளாவைச் சேர்ந்த என்.எஸ்.ஜி வீரர் சந்தீப் உன்னிகிருஷ்ணனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த கேரள முதல்வர் அச்சுதானந்தனை உண்ணிகிருஷ்ணனின் குடும்பத்தினர் வீட்டுக்குள் நுழைய விட மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உண்ணிகிருஷ்ணனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அச்சுதானந்தனும், கேரள உள்துறை அமைச்சர் கே.பாலகிருஷ்ணனும், பெங்களூர் வந்தனர்.
ஆனால் எந்த அரசியல்வாதியையும் சந்திக்க தாங்கள் விரும்பவில்லை என்று சந்தீப் உண்ணிகிருஷ்ணனின் தந்தை உண்ணிகிருஷ்ணன் பிடிவாதமாக கூறி விட்டதால் அவரது வீட்டுக்குச் செல்ல முடியாமல் சர்வதேச விமான நிலையத்திலேயே கிட்டத்தட்ட 2 மணி நேரம் அச்சுதானந்தனும், பாலகிருஷ்ணனும் காத்திருந்தனர்.
இந்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் அச்சுதானந்தன் சந்தீப் உண்ணிகிருஷ்ணன் வீட்டுக்குக் கிளம்பினார். அவரைப் பார்த்ததும் ஆவேசமடைந்த சந்தீப்பின் தந்தை உண்ணிகிருஷ்ணன், கேரள முதல்வர் வீட்டுக்குள் நுழையக் கூடாது என்று கோபத்துடன் கூறினார். உள்ளே விடாமல் அவரது உறவினர்களும் தடையாக நின்றனர்.
இதனால் அச்சுதானந்தன் அதிர்ச்சி அடைந்தார். கூட வந்த பாதுகாப்புப் படையினருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. இருப்பினும் மிகுந்த சிரமப்பட்டு வீட்டுக்குள் நுழைந்த அச்சுதானந்தன், சந்தீப்பின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். ஆனால் அவரைத் தடுக்க உண்ணிகிருஷ்ணன் கடுமையாக முயன்றதால் அந்த இடமே பரபரப்பாக இருந்தது.
முன்னதாக உண்ணிகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது மகன் கேரளாவுக்கு மட்டும் சொந்தமானவன் அல்ல. இந்த நாட்டுக்காக போராடியவன். எனது வீட்டுக்கு எந்த அரசியல்வாதியும் வரத் தேவையில்லை. எந்த அரசியல்வாதியையும் சந்திக்க நான் விரும்பவில்லை.
மீறி யாராவது வந்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்றார்.
இதேபோல நேற்று காலை பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி உண்ணிகிருஷ்ணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூற முயன்றபோதும் பேச மறுத்து விட்டார் உண்ணிகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications