என்னை கொன்றுவிடுங்கள்.. வாக்குமூலத்தின்போது கதறிய கஸாவ்

அவனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளி்ல் ஏகப்பட்ட தகவல்கள் கிடைத்தவண்ணம் உள்ளன.
அவர் கூறியுள்ள தகவல்கள்:
நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் 4ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். அதன் பின்னர் மதரஸாவில் தான் படித்தேன்.
நான் உள்பட 40 பேர் லஷ்கர் ஏ தொய்பாவால் பயிற்சி அளிக்கப்பட்டோம். பாகிஸ்தானின் பல இடங்களில் வைத்து இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது.
துப்பாக்கிளைக் கையாள்வது, நீச்சல், படகுகளை கையாள்வது, ஆர்டிஎக்ஸ் குண்டுகளை வைப்பது உள்பட பல பயிற்சிகள் தரப்பட்டன. இடையே மும்பைக்குச் சென்று டார்கெட்களை பார்த்துவிட்டு வரவும் குழுக் குழுவாக அனுப்பி வைக்கப்பட்டோம்.
இதற்காக இந்திய கல்லூரிகளின் ஐடி கார்டுகள் எங்களுக்குத் தரப்பட்டன. அந்த கார்டுகளைக் காட்டி ஹோட்டல்களில் அறை எடுத்துத் தங்கினோம். எனக்கு பெங்களூரைச் சேர்ந்த ஒரு கல்லூரியின் ஐடி கார்ட் தரப்பட்டது.
இதையடுத்து மும்பையில் தாக்குதல் நடத்த அனுப்பப்பட்டோம். எங்கள் குடும்பத்தினருக்கு பணம் தருவதாகவும் கூறினார்கள்.
தாக்குதல் நடத்திய பின்னர் பத்திரமாக கராச்சிக்குத் திரும்பி வந்துவிடலாம், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்கள்.
என் குடும்பத்துக்கு வேண்டிய நிதி உதவிகள் செய்யப்படும் என்றனர்.
போலீசாரிடம் மாட்டினால் தற்கொலை செய்யுமாறு கூறியிருந்தனர். ஆனால், நான் உயிரோடு மாட்டிக் கொண்டேன். இதனால் என்னை பேசாமல் கொன்றுவிடுங்கள். இல்லாவிட்டால் என் குடும்பத்தை லஷ்கர் ஏ தொய்பா கூண்டோடு காலி செய்துவிடும்.
என்னுடன் மும்பை வந்த தீவிரவாதிகள் 9 பேர். அவர்களது பெயர்கள், அபு அக்சா, அபு உமர், படா அப்துல் ரஹ்மான், சோட்டா அப்துல் ரஹ்மான், அபு அலி, அபாதுல்லா, சோஹய்ப், உமர் ஆகியோர்.
எங்கள் 10 பேரையும் தலா 2 பேர் கொண்ட 5 குழுக்களாகப் பிரித்து தாக்குதல் திட்டத்தைக் கொடுத்தார்கள். ஒரு குழு செய்யும் வேலை இன்னொரு குழுவுக்குத் தெரியாது.
நாங்கள் கராச்சியிலிருந்து 13ம் தேதி ஒரு கப்பலில் அனுப்பப்பட்டோம். ஆனால், கடலிலேயே அந்தக் கப்பல் பல முறை நிறுத்தப்பட்டது. குஜராத் கடல் பகுதி வரை வந்தது.
அங்கு எங்களது இன்னொரு கூட்டாளிகள் குஜராத்தைச் சேர்ந்த ஒரு படகை (குஜராத்தைச் சேர்ந்த மீன்பிடி படகு குபேர்) கடத்தி தயார் நிலையில் வைத்திருந்தனர். நாங்கள் அந்தப் படகுக்கு ஆயுதங்கள் மற்றும் 2 ரப்பர் படகுகளுடன் மாறினோம்.
அந்தப் படகில் இருந்தவர்கள் எங்களை மும்பை கடல் பகுதி வரை கொண்டு வந்தனர். இதையடுத்து ரப்பர் படகுகளுக்கு மாறி மும்பைக்கு வந்தோம்.
நானும் என்னுடன் வந்தவனும் சிஎஸ்டி ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்திவிட்டு ஓபராய் ஹோட்டலுக்கு வந்தோம். மற்றவர்கள் பந்த்வார் பார்க்கில் உள்ள லியோபோல்ட் கபேவில் தாக்குதல் நடத்திவிட்டு தாஜ் ஹோட்டலுக்குச் சென்றனர்.
என்னுடன் வந்தவர்களில் சிலர் பிரிட்டஷைச் சேர்ந்த பாகிஸ்தானியர்கள். அவர்களுக்கு வேண்டுமானால் அல்-கொய்தாவுடன் தொடர்பு இருக்கலாம். எனக்கு லஷ்கர் மட்டுமே தெரியும். வேறு எதுவும் தெரியாது.
இந்தத் தாக்குதல் குறித்தோ, கொலைகள் குறித்தோ எனக்கு எந்தக் கவலையும் இல்லை. என் கவலை எல்லாம் நான் உயிரோடு பிடிபட்டது தான். என்னைக் கொன்றுவிடுங்கள். இல்லாவிட்டால் லஷ்கர் என் குடும்பத்தைக் காலி செய்துவிடும் என்று கூறியுள்ளான் கஸாவ்.
மேலும் குபேர் படகில் இருந்த ஊழியர் கொலை செய்யப்பட்டது குறித்து தனக்குத் தெரியாது என்றும் இவன் கூறியுள்ளான். இவர்களை ரப்பர் படக்குக்கு மாற்றிவிட்டு குபேரில் திரும்ப பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழைந்த இந்தத் தீவிரவாதிகளின் வழி காட்டிகள் தான் அந்த ஊழியரைக் கொலை செய்துவிட்டு தங்களது கப்பலில் ஏறி கராச்சிக்குத் தப்பியதாகத் தெரிகிறது.
இப்போது இவனிடம் எப்பிஐயும் தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது.
கஸாவை காப்பாற்ற போலீஸ் பட்டபாடு:
முன்னதாக இவனும் இவனது கூட்டாளியும் ஸ்கோடா காரில் தப்பியபோது மும்பை டி.பி. மார்க் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் காதம் தலைமையில் வழிமறித்தனர். அப்போது இவன் சுட்டதில் ஒரு போலீஸ்காரர் பலியானர். போலீசார் தி்ருப்பிச் சுட்டதில் இவனது கூட்டாளி பலியானான்.
இதையடுத்து இவனை போலீசார் பிடித்தனர். அப்போது அப் பகுதி பொது மக்கள் பலரும் இவனைப் பிடிக்க உதவியுள்ளனர். பிடிபட்ட இவனை பொது மக்கள் அடித்து உதைத்துள்ளனர். இவனை உயிரோடு அவர்களிடம் இருந்து மீட்டு பத்திரமாகக் காவல் நிலையத்துக்குக் கொண்டு வரவே படாதபாடு பட்டுள்ளனர் போலீசார்.












Click it and Unblock the Notifications