போர் வெடிக்கும் பயம்-வந்தார் ரைஸ், மெக்கெய்ன் பாக். பயணம்
டெல்லி: மும்பை தாக்குதலையடுத்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸ்ஸா ரைஸ் இன்று இந்தியா வந்தார்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தானிடையே ராணுவ மோதல் வரலாம் என அமெரிக்கா அஞ்சுகிறது. இதையடுத்து இந்தியாவை சமாதானப்படுத்தவும், இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் உதவுமாறு பாகிஸ்தானுக்கு நெருக்கடி தரவுமே அவர் வந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இன்று பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, புதிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இன்னும் தனது பதவியைக் காத்துக் கொண்டிருக்கும் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோருடன் பேச்சு நடத்தும் அவர் பாகிஸ்தானுக்கும் செல்லலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதை பாதுகாப்புக் காரணங்களுக்காக அமெரிக்காவோ, பாகிஸ்தானோ உறுதி செய்யவில்லை.
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மேலும் நெருக்கடி தருவது குறித்து ரைஸிடம் இந்தியா வலுவான கோரிக்கை வைக்கும் எனத் தெரிகிறது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை மூடுவது, தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஆகிய விஷயங்களில் அந்த நாட்டுக்கு நெருக்குதல் தருமாறு இந்தியா கோரிக்கை வைக்கவுள்ளது.
தனது ஐரோப்பிய பயணத்தை பாதியில் கைவிட்டுவிட்டு ரைஸ் இந்தியா வந்துள்ளார்.
ஜான் மெக்கெய்ன் பாகிஸ்தான் பயணம்:
இதற்கிடையே அமெரிக்காவின் மூத்த செனட்டரும் ஜனாதிபதி தேர்தலில் ஓபாமாவை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தோற்றவருமான ஜான் மெக்கெய்ன் பாகிஸ்தான் செல்கிறார்.
இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் பாகிஸ்தான் முழு அளவில் இந்தியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள மெக்கெய்ன், இல்லாவிட்டால் பாகிஸ்தான் மக்கள் உலக அரங்கில் மேலும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானில் அவர் அந் நாட்டு ராணுவத் தலைவர் அஸ்வாக் கியானியையும் சந்திக்கிறார்.












Click it and Unblock the Notifications