கராச்சியில் 'பத்திரமாக' இருக்கிறார் தாவூத் இப்ராகிம்!
மும்பை: பாகிஸ்தானிடம் இந்தியா கோரியுள்ள தீவிரவாதிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தாவூத் இப்ராகிம், கராச்சி நகரில்தான் பத்திரமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மும்பை தாக்குதல் சம்பவத்தை தாவூத் இப்ராகிம்தான் திட்டமிட்டு அரங்கேற்றியது என்று இந்தியா உறுதியாக நம்புகிறது.
பல்வேறு வழக்குகளில் தாவூத் இப்ராகிமுக்கு தொடர்பு இருப்பதால் அவரை நாடு கடத்த வேண்டும் என பாகிஸ்தான் அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது இந்தியா. ஆனால் தாவூத் இங்கு இல்லை என்று வழக்கம் போல பழையை பாட்டையே பாடிக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தானிடம் அளித்துள்ள தீவிரவாதிகள் பட்டியலில் தாவூத் இப்ராகிமும் அடங்கியுள்ளார். இந்தப் பட்டியலில் இருப்பவர்களை அனுப்ப முடியாது என்று இப்போதும் கூறி விட்டது பாகிஸ்தான்.
தாவூத் பாகிஸ்தானிலேயே இல்லை என்று அந்நாட்டு அரசு கூறி வந்தாலும், கராச்சியியல் உள்ள தனது ஆடம்பர பங்களாவில் தாவூத் இப்ராகிம் பத்திரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அதில், தாவூத் இப்ராகிம் வழக்கம் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சுதந்திரமாக இருக்கிறார். நெருக்கடியின்றி, பத்திரமாக இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து அவரது உறவினர்கள் சலீம் அன்சாரி உள்ளிட்டோர் கராச்சி வந்து தாவூத்தை சந்தித்துப் பேசியுள்ளனர்.
அப்போது அவர்களிடம், பாகிஸ்தான் அரசால் என்னை தொடக் கூட முடியாது. நான் பத்திரமாகத்தான் இருக்கிறேன் என்று தாவூத் கூறியுள்ளாராம்.
மும்பையில் உள்ள தனது உறவினர்கள், நண்பர்கள், கூட்டாளிகள் ஆகியோருடன் தொடர்ந்து தாவூத் தொலைபேசித் தொடர்பை வைத்திருக்கிறார். சமீபத்தில் கூட, ஹவாலா மூலம் மும்பையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருக்கு பிசினஸுக்காக ரூ 120 கோடியை அனுப்பி வைத்தாராம் தாவூத்.
மும்பை - கராச்சி இடையிலான ஹவாலா பிசினஸ் எப்போதும் போல பிசியாக, தங்கு தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது.
தாவூத்தின் நடமாட்டத்தை இந்திய உளவு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்த வண்ணம் உள்ளனர். அதேபோல அமெரிக்க உளவுத்துறையினரும் தாவூத் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில்தான் தாவூத் இப்ராகிம் கராச்சியில் இருப்பதை இந்தியா அடித்துக் கூறி வருகிறது.
அதேசமயம், மும்பையில் உள்ள தாவூத் கூட்டாளிகள் மீது மகாராஷ்டிர அரசு ஏன் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என்பது தெரியவில்லை.
மும்பையிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் உள்ள தாவூத் இப்ராகிமின் நிழலுலக செயல்பாடுகள் இன்னும் அப்படியேதான் உள்ளன. அவற்றை முடக்கவோ, ஒடுக்கவோ மத்திய அரசும், மகாராஷ்டிர அரசும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவரே ஆச்சரியத்துடன் கேட்கிறார்.
தாவூத்தின் முக்கிய கூட்டாளிகளில் ஒருவர் முகம்மது அலி. இவர் தொடர்ந்து தாவூத்தின் கட்டளைப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவரது வேலையே கடத்தல்தான். அந்தக் கடத்தலைத் தடுக்க மகாராஷ்டிர காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார் அந்த அதிகாரி.












Click it and Unblock the Notifications