பாக். தீவிரவாத முகாம்களை தாக்கி அழிக்க வேண்டும்: பாபர் மசூதி கமிட்டி
டெல்லி: பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கி அழிக்க உடனடியாக ராணுவத்தை அனுப்ப குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உத்தரவிட வேண்டும். இதில் இனியும் நாம் பொறுமை காக்கக் கூடாது என அகில இந்திய பாபர் மசூதி மறு சீரமைப்பு கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி கமிட்டியின் தலைவர் முகம்மது யூனிஸ் சித்திக் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவில் உள்ள மக்கள் தினசரி செத்து செத்துப் பிழைக்கிறார்கள். இத்தனைக்கும் காரணம் பாகிஸ்தானில் இருந்தபடி செயல்பட்டு வரும் தீவிரவாதிகள்தான். இதற்கு ஒரே முடிவு, அங்குள்ள தீவிரவாத பயிற்சி முகாம்களை அழிப்பதுதான்.
பாகிஸ்தானில் உள்ள அத்தனை தீவிரவாத முகாம்களையும் அழிக்க ராணுவத்தினருக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உத்தரவிட வேண்டும். உடனடியாக இதை அவர் செய்ய வேண்டும். இனியும் இதில் நாம் பொறுமையாக இருக்க முடியாது. இதுதான் நமது பிரச்சினைக்கு ஒரே தீர்வு.
பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், அதற்கு இந்திய முஸ்லீம்கள் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் தருவார்கள். உறுதியுடன் இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
துக்க தினம் கிடையாது
மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், பலியான குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், பாபர் மசூதி இடிப்பின் 16வது நினைவு நாளையொட்டி துக்க தினம் கடைப்பிடிக்கப்பட மாட்டாது. மேலும், எந்தவிதமான போராட்டமும் நடத்தப்பட மாட்டாது.
இருப்பினும் அயோத்தியில்,அதே இடத்தில் மீண்டும் பாபர் மசூதியைக் கட்ட வேண்டும் அல்லது ராமர் கோவில் - பாபர் மசூதி பிரச்சினையை உச்சநீதிமன்றத்திற்கு விட வேண்டும் என்று கோரி குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்படும்.
சுப்ரீம் கோர்ட் என்ன தீர்ப்பளித்தாலும் அதை முஸ்லீம் சமுதாயம் ஏற்றுக் கொள்ளும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், நீதித்துறை மீதும், சட்டம், ஒழுங்கின் மீதும் முஸ்லீம் சமுதாயம் முழு நம்பிக்கை கொண்டுள்ளது என்றார் சித்திக்.












Click it and Unblock the Notifications