மீண்டும் மீண்டும் வேட்டையாடுவோம்-என்.எஸ்.ஜி

மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த என்.எஸ்.ஜி. கமாண்டோக்களின் அதிரடி தாக்குதலைத் தலைமையேற்று நடத்தியவர் ரியான் சக்கரவர்த்தி. இந்தப் பிரிவு ராணுவத்தின் 52வது சிறப்பு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்ததாகவும்.
தாஜ் ஹோட்டலில் நுழைந்து கொண்ட அத்தனை தீவிரவாதிகளையும் ரியான் தலைமையிலான கமாண்டோக்கள் உயிரையும் மதிக்காமல் தீரத்துடன் செயல்பட்டு கடைசி தீவிரவாதி வரை யாரையும் விட்டு வைக்காமல் தீர்த்துக் கட்டி விட்டுத்தான் வெளியே வந்தது.
தாஜ் ஹோட்டல் வேட்டை குறித்து ரியான் சக்கரவர்த்தி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், நான் உள்ளே வீரர்களுடன் சென்றபோது எனது தலைக்கு மேலே ஏ.கே.47 துப்பாக்கி வெடித்ததை கேட்க முடிந்தது. உடனடியாக சுதாரித்துக் கொண்டு நகர்ந்தோம். அதிர்ஷ்டவசமாக தோட்டாக்கள் எங்கள் மீது படவில்லை.
உடனடியாக கையிலிருந்த இரண்டு கிரனேடுகளை வெடிக்கச் செய்தோம். இதில் ஒரு தீவிரவாதியை வீழ்த்த முடிந்தது என்றார்.
ரியான் படையில் இடம் பெற்றிருந்த ஹவில்தார் ஆசாத் சிங் கூறுகையில், எங்களைத் தாக்க முயன்ற தீவிரவாதிகளை நிலை குலைய வைப்பதற்காக நாங்கள் கிரெனடுகளை வெடிக்கச் செய்தோம். அப்போது ஜன்னல் வழியாக ஒரு தீவிரவாதி கீழே வந்து விழுந்தான். அவன் கீழே விழுவதற்கு முன்பாகவே நான் அவனை சரமாரியாக சுட்டு வீழ்த்தினேன் என்றார்.
கேப்டன் ரியானும், ஹவில்தார் சிங்கும் ஆரம்பம் முதல் கடைசி வரை ஹோட்டலுக்குள்ளேயே இருந்துள்ளனர். இருவரும் அத்தனை தீவிரவாதிகளையும் வேட்டையாடப்பட்டதை நேரில் பார்த்தவர்கள் ஆவர். ஹோட்டலின் முதல் மாடியில் ஒளிந்து கொண்டிருந்த கடைசி தீவிரவாதியை இவர்கள் இருவரும்தான் சுட்டு வீழ்த்தி கதையை முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரும் ஒரே நேரத்தில் அந்த தீவிரவாதியை நோக்கி சுட்டுள்ளனர். ஆனால் சிங்கின் துப்பாக்கியிலிருந்து புயல் வேகத்தில் போன தோட்டாவுக்குத்தான் தீவிரவாதியின் உயிரைக் குடித்த பெருமை கிடைத்தது.
இதை பெருமையுடன் சொல்லும் சிங், நான் ஜம்மு காஷ்மீரில் 7 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். எப்படிச் சுட்டால் எதிரி வீழ்வான் என்பதை நான் நன்கு அறிவேன். அதை மீ்ண்டும் ஒருமுறை தாஜ் ஹோட்டலில் அனுபவித்தேன். எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த எதிரி சுதாரிப்பதற்குள் அவனை வீழ்த்தியது எனது பெருமை மிகு துப்பாக்கி என்றார் சிங்.
அருகில் இருந்த ரியான் கூறுகையில், நமது இலக்கு முதலில் தெளிவாக இருக்க வேண்டும். பிறகு அதை நோக்கி உறுதியுடன் செல்ல வேண்டும். பின்னர் கதையை முடிக்க வேண்டும். எதிரிக்கு சற்றும் அவகாசம் தரக் கூடாது. அவனையும் வீழ்த்தி, நாமும் பத்திரமாக திரும்ப வேண்டும், நம்முடன் இருப்பவர்களும் பத்திரமாக திரும்ப வகை செய்ய வேண்டும் என்றார்.
பின்னர் இருவரும் ஒரே குரலில் கூறியது - இனியும் எதிரிகள் நமது மண்ணில் காலடி எடுத்து வைப்பார்கள் என நாங்கள் நினைக்கவில்லை. நம்மிடம் அவர்களை ஒழித்துக் கட்டும் சக்தி முழுமையாக உள்ளது.
அவர்கள் வெட்கம் கெட்டவர்களாக இருந்தால் மீண்டும் வருவார்கள். வந்தால் உயிருடன் திரும்பிப் போக மாட்டார்கள். மீண்டும் மீண்டும் அவர்களை நாங்கள் வேட்டையாடுவோம் என்றனர்.












Click it and Unblock the Notifications