பாக். பிரதமர் கிலானியுடன் ஐ.எஸ்.ஐ. தலைவர் அவசர ஆலோசனை
இஸ்லாமாபாத்: மும்பைத் தீவிரவாதத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐயின் தொடர்பு இருப்பதாக இந்தியா உறுதியாக கூறி வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானியை ஐ.எஸ்.ஐ தலைவர் ககம்மது சுஜா பாஷா சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
கிலானியை சந்தித்த பாஷா, பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலவரம் குறித்து விளக்கியதாக பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இருப்பினும் மும்பை சம்பவம் தொடர்பாகவே இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள்தான் பயிற்சி அளித்துள்ளனர் என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இதை அமெரிக்க உளவுத் துறை தகவல்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
கடந்த வாரம், ஐ.எஸ்.ஐ தலைவர் பாஷாவை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை கிலானி ஏற்றுக் கொண்டார். ஆனால் கடைசி நேரத்தில் பல்டி அடித்து விட்டது பாகிஸ்தான். பாஷா அனுப்பப்படவில்லை.
ராணுவ அதிகாரிகளுடன் தளபதி தனி ஆலோசனை
இதற்கிடையே, ராணுவ உயர் அதிகாரிகளுடன் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி தனியாக ஒரு ஆலோசனை நடத்தியுள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள், ராணுவ செயல்பாடுகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
பெஷாவர் குண்டுவெடிப்பில் 20 பேர் பலி
இதற்கிடையே, பாகிஸ்தானின் வட மேற்கு நகரான பெஷாவரில் நேற்று சிறுபான்மையினரான ஷியா முஸ்லீம்களின் தொழுகைக் கூடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 20 பேர் பலியானார்கள்.
பெஷாவர் நகரின் கச்சா ரிசால்தார் என்ர இடத்திற்கு அருகே உள்ள இமாம்பர்கா என்ற இடத்தில் இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
இந்த குண்டுவெடிப்பி்ல 3 குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். 40 பேர் படுகாயமடைந்தனர்.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கடைகள் உள்ளிட்டவற்றில் தீப்பிடித்துக் கொண்டது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால் பெஷாவரிலும், வட மேற்கு எல்லைப்புற மாகாணத்திலும் கடந்த சில மாதங்களாகவே ஷியா பிரிவினரைக் குறி வைத்து இதுபோன்ற தாக்குதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications