நாடாளுமன்றம் கூடியது-மும்பை தாக்குதலுக்கு கண்டனம்
டெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு இரு அவைகளிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை கூடியது.
லோக்சபா கூடியதும் மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி வாசித்தார்.
சோம்நாத் பேசுகையில், மும்பை, அஸ்ஸாம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்துள்ள தீவிரவாதத் தாக்குதல்கள் கடும் கண்டனத்துக்குரியவை. தீவிரவாத செயல்களை ஒடுக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நாட்டின் பொருளாதார தலைநகரான மும்பையில் நடந்துள்ள இந்தத் தாக்குதலால் நகரமே ஸ்தம்பித்துப் போனது.
இதுபோன்ற கோழைத்தனமான, மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.
இதேபோல ராஜ்யசபாவிலும் மும்பைத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி அதுதொடர்பான தீர்மானத்தை வாசிக்கையில், அரசும், மக்களும் இணைந்து தீவிரவாதத்தை அனைத்து வழிகளிலும் முறியடிக்க வேண்டும் என்றார்.
இரு அவைகளிலும் மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு அஞ்சலியும், புகழாரமும் சூட்டப்பட்டது. சோம்நாத் சாட்டர்ஜி கூறுகையில்,ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான நண்பனாக விளங்கியவர் வி.பி.சிங்.
மதச்சார்பின்மை மற்றும் ஜாதிகளற்ற சமுதாயத்திற்காக பாடுபட்ட உண்மையான தலைவர் வி.பி.சிங் என்றார்.
ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி ராஜ்யசபாவில் கூறுகையில், வி.பி.சிங்கின் மறைவின் மூலம், சிறந்த தேசபக்தரை, தலைவரை, மிகச் சிறந்த நாடாளுமன்றவாதியை, திறமையான நிர்வாகியை நாடு இழந்து விட்டது என்றார்.
இரு அவைகளிலும் மறைந்த உறுப்பினர்களுக்கும், மும்பைத் தாக்குதலில் பலியானவர்களுக்கும் ஒரு நிமிடம் மெளனம் அனுஷ்டித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
எம்.பி. முனவர் ஹசன் விபத்தில் மரணம்:
இதற்கிடையே, ஹரியானா மாநிலம் பால்வால் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் சமாஜ்வாடி கட்சியின் லோக்சபா உறுப்பினர் செளத்ரி முனவர் ஹசன் பலியானார்.
45 வயதாகும் முனவர் ஹசன், விபத்தில் சிக்கியதும் டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
சமாஜ்வாடி கட்சியின் சார்பில் உ.பி. மாநிலம் முசாபர்நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் முனவர் ஹசன். ஆனால் கடந்த ஜூலை 22ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சமாஜ்வாடிக் கட்சியின் உத்தரவை மீறி பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவாக திரும்பினார்.
இதையடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்கிய சமாஜ்வாடி, எம்.பி உறுப்பினர் பதவியிலிருந்தும அவரை தகுதி நீக்கம் செய்ய லோக்சபா சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த மனு இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications