கூகுள் எர்த்தின் சாட்டிலைட் படங்களைத் தடை செய்யக் கோரி வழக்கு
மும்பை: கூகுள் எர்த்தில், நாட்டின் முக்கிய இடங்களின் சாட்டிலைட் படங்கள் இடம் பெறுவதை தடை செய்யக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அமீத் கர்கானி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், கூகுள் எர்த் இணையதளத்தில் நாட்டின் முக்கிய பகுதிகளின் சாட்டிலைட் படங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றை உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும். அல்லது பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி இவற்றை முடக்கி வைக்கவாவது உத்தரவிட வேண்டும்.
இந்தியாவில் உள்ள அணு உலைகள், பாதுகாப்பு நிலைகள் ஆகியவற்றின் படங்கள் இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. இது மிகவும் ஆபத்தானது. மும்பைத் தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதிகள், கூகுள் எர்த் தளத்தைப் பயன்படுத்தியிருப்பது இதை மேலும் உறுதி செய்வதாக உள்ளது என்று அதில் கூறியுள்ளார்.
இந்த மனு வருகிற 18ம் தேதியன்று விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில் கூகுள் நிறுவனம் தவிர மத்திய பாதுகாப்பு, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைகளும் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.
கூகுள் எர்த் தளத்தில் உலகின் அனைத்துப் பகுதிகளின் சாட்டிலைட் படங்களையும் பார்க்கலாம். நமது வீட்டைக் கூட, கூகுள் எர்த் 'மொட்டை மாடி'யிலிருந்து பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications