வீரபாண்டியாருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
சென்னை: சேலம் அங்கம்மாள் காலனியில் வீடுகளை ஆக்கிரமித்து அபகரிக்க முயன்றதாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து விட்டது.
இந்திய மக்கள் வழக்கறிஞர் மையம் சார்பில் மனோகரன், ஹரிபாபு ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வழக்கு தொடர்ந்தனர்.
அதில், சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள தாழ்த்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்த மக்களை வெளியேறும்படி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தூண்டுதலின் பேரில் அடியாட்கள் மிரட்டி வெளியேற்றி
விட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து சேலம் காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்கும்படி மனுதாரர்களை அறிவுறுத்தியது.
இதையடுத்து வக்கீல் ஹரிபாபு, சேலம் கலெக்டர் அலுவலகத்தை இடிக்க கூடாது என்று கோரி புதிய வழக்கு ஒன்றைத் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாகவும், புதிய புகார் தருமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஆனால் இரு பிரச்சினைகள் தொடர்பாக மனுதாரர்கள் சார்பில் புகார் கொடுக்கச் சென்றபோது ஆணையர் அதை பெற மறுத்ததாக சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி மனோகர் மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, கே.சந்துரு
ஆகியோர் முன்பு விசாரணை நடை பெற்று வந்தது.
இடையில் வீரபாண்டி ஆறுமுகம் சார்பில் சேலம் உதவி மாஜிஸ்திரேட் அமுதா மற்றும் அரசு வக்கீல் ஆகியோர் வக்கீல் ஹரிபாபுவை சமரசப்படுத்த முயன்றதாக டெஹல்கா.காம் இணையதளம் புது சர்ச்சையை எழுப்பியது.
இந்தச் சூழ்நிலையில்தான் வீரபாண்டி ஆறுமுகம் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவரது துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் மனோகரின் மனு மீது தீர்ப்பளித்தது.
அதில், மனுதாரருக்கு வழக்கு தொடர முகாந்திரம் கிடையாது. எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
அப்போது இதே வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அங்கம்மாள் காலனி மக்கள் சார்பில் வக்கீல் சங்கரசுப்பு ஆஜராகி கூறினார்.
அதற்கு நீதிபதிகள் இந்த வழக்கில் தீர்ப்பு கூறி விட்டதால்
அங்கம்மாள் காலனி மக்களை இதில் சேர்க்க முடியாது.
வேண்டுமானால் புதிய மனுவை பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் தாக்கல் செய்யலாம் என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications