தனியார் நிறுவன உயர் அதிகாரிகள் சம்பள வெட்டு!!
மும்பை: செலவைக் குறைக்கும் சிக்கன நடவடிக்கை எனும் பெயரில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வந்த தனியார் நிறுவனங்கள், அடுத்த கட்டமாக உயர் அதிகாரிகளின் சம்பளத்தில் கை வைக்க முடிவு செய்துள்ளன.
சர்வ தேச நிதி நெருக்கடியால், பண வரத்து குறைந்து தள்ளாட்டத்தில் உள்ள நிறுவனங்கள் பல லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துவிட்டன. மேலும் 30 சதவிகித பணியாளர்கள் எப்போது வேண்டுமானும் நீக்கப்படும் நிலை.
இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ், கிங்பிஷர் போன்றவை ஏற்கெனவே தங்களது உயர் அதிகாரிகளுக்கு அளித்து வந்த சலுகைகளை நிறுத்தியதோடு, 20 முதல் 80 வரை சதவிகித ஊதியக் குறைப்பும் செய்துள்ளன. பல ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் மட்டுமே தரப்படுகின்றன. இதற்கு ஊழியர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதே பாணியில் இப்போது பிற தனியார் நிறுவனங்களும் தங்கள் உயர் நிர்வாகிகளுக்கு சம்பளக் குறைப்பை அறிவிக்க உள்ளன.
ஐடி மற்றும் தொலைத் தொடர்புத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் முதல் கட்டமாக 20 சதவிகித சம்பள உயர்வை அமல்படுத்த உள்ளன.
'ஊழியர் குறைப்புடன் இதனை ஒப்பிடக் கூடாது. சிக்கன நடவடிக்கையின் மென்மையான ஒரு பக்கமாகவே இதைப் பார்க் வேண்டும். இதற்கு உயர் அதிகாரிகளும் ஒப்புக் கொள்வதே புத்திசாலித்தனம். நிறுவனத்தை இழுத்து மூடுவதைவிட, குறைந்த சம்பளம் கொடுத்தாவது தொடர்ந்து நடத்துவதுதானே அனைவருக்கும் நல்லது', என்கிறார் டெல்லி யுனைட்டட்லெக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராகேஷ் சர்மா.
உற்பத்தித் துறையில் உள்ள முன்னணி நிறுவனங்கள் ஏற்கெனவே இந்த சம்பளக் குறைப்பை அமல்படுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.